பதிவு செய்த நாள்
30
அக்
2014
12:10
நாமக்கல் : முருகன் கோவிலில் நடந்த, சூரசம்ஹார விழா கோலாகலமாக நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். நாமக்கல் அடுத்த, பேளுக்குறிச்சி கூவமலையில், பிரசித்தி பெற்ற பழனியாண்டவர் கோவில் உள்ளது. இங்கு ஸ்வாமி, குமரிநாயகி அம்மாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எட்டாம் ஆண்டு சூரசம்ஹார விழா நேற்று முன்தினம் துவங்கியது. அன்று, ஸ்வாமி வேலாம்பாளையத்தில் இருந்து புறப்பட்டு, கூவமலைக்கு வந்தடைந்தார். நேற்று காலை முதல், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதை தொடர்ந்து, மாலை, 4.30 மணிக்கு சூரசம்ஹார விழா நடந்தது. பல்லக்கில் ஸ்வாமி எழுந்தருளி திருச்சுற்று வந்தார். இன்று காலை, 10.30 மணி முதல், 12 மணி வரை, ஸ்வாமி திருக்கல்யாண விழா நடக்கிறது. அதையடுத்து, ஸ்வாமி, வேலாம்பாளையத்துக்கு குடிபுகுதல் நிகழ்ச்சி நடக்கிறது.விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
* நாமக்கல் பாலதண்டாயுதபாணி ஸ்வாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம், திருக்கல்யாண உற்சவ விழா நேற்று காலை, 6.30 மணிக்கு, கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, ஓம் சக்தி மற்றும் சுப்ரமணியர் ஹோமம், சக்திவேல் பூஜை நடந்தது.காலை, 8.30 மணிக்கு பாலதண்டாயுதபாணி ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. அன்று மாலை, 6 மணிக்கு, ஸ்வாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இரவு, 7 மணிக்கு, முருகப்பெருமான், சூரசம்ஹாரத்துக்கு புறப்பட்டு, சூரனை வதம் செய்தார். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மாலை, 6.30 மணி முதல், இரவு, 7.30 மணி வரை திருக்கல்யாண உற்சவ விழா கோலாகலமாக நடக்கிறது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவில், ப.வேலூர் கபிலர்மலை பாலசுப்ரமணியர் கோவில், சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவில், கூலிப்பட்டி முருகன் கோவில், குமாரபாளையம் முருகன் கோவில், ராசிபுரம் கைலாசநாதர் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா வெகு சிறப்பாக நடந்தது.