பதிவு செய்த நாள்
31
அக்
2014
11:10
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நடந்து வந்த கந்த சஷ்டி நிறைவு விழாவை ஒட்டி, நேற்று காலை, உற்சவருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. திருத்தணி முருகன் கோவிலில், கடந்த 24ம் தேதி முதல், கந்த சஷ்டி என்கிற லட்சார்ச்சனை விழா நடந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை, புஷ்பாஞ்சலி நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான, நேற்று காலை 10:00 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி ஆகியோர் கல்யாண சீர்வரிசைகளுடன் மலைக்கோவில் அலுவலகத்தில் இருந்து காவடி மண்டபத்திற்கு வந்தனர். திருத்தணி முருகன் கோவிலில், கந்த சஷ்டி நிறைவு ஓட்டி, உற்சவர் முருகப்பெருமானுக்கு நேற்று திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பிரசாத கடை ஒப்பந்ததாரர் ஹரிஹரமுத்து செய்திருந்தார். நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.