காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு, சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, கடந்த, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல், தினமும் காலை, மாலை இருவேளைகளில் சுவாமி புறப்பாடும், லட்சார்ச்சனையும் நடந்தது. இந்த விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில் ஆறுமுகசுவாமி மலர் அலங்காரத்தில், கோவிலில் இருந்து புறப்பட்டு, ராஜவீதிகளில் வலம் வந்தார். உடன் முருகன் வேடமிட்ட சிறுவன் மற்றும் நவ வீரர்கள் கொண்ட படை சென்றது. இரவு 10:00 மணியளவில் சுவாமி கோவிலை வந்தடைந்தது. அதன்பின், இரவு 11:30 மணியளவில், சூரசம்ஹாரம் நடந்தது.