காரைக்கால்: திருநள்ளாரில், சனிப்பெயர்ச்சி விழாவிற்காக பந்தல் அமைக்கும் பணி துவங்கியது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இங்கு, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா வரும் டிச., 16ம் தேதி நடக்கிறது.அதையொட்டி, திருநள்ளார் கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட விழா முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. கோவில் ராஜகோபுரத்தின் எதிர்புறம் கிழக்கு வீதி, தெற்கு வீதியில் பக்தர்கள் வரிசையில் நிற்பதற்கு வசதியாக, பந்தல் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.அதேபோல் வி.ஐ.பி., தரிசனத்திற்காக சரஸ்வதி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் மற்றும் நளன் குளத்தைச் சுற்றியும் பந்தல் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.