பதிவு செய்த நாள்
22
ஜன
2015
02:01
மயிலாடுதுறை: திருநாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் நேற்று இரவு நடந்த கருட சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 11 பெருமாளையும், திருமங்கையாழ்வாரையும் வழிபட்டனர்.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த நாங்கூரில் 11 திவ்ய தேச கோவில்கள் உள்ளன. இந்த கோவில்க ளில் இருந்து ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறு நாள் பெருமாள்கள் புறப்பட்டு நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருள கருடசேவை உற்சவம் நடைபெறும். இவ்வாண்டு தை அமாவாசைக்கு மறுநாளான நேற்று இரவு கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி இரு தினங்களுக்கு முன்பு திருநகரியிலிலுந்து திருமங்கையாழ்வார் புறப்பட்டு 11 பெருமாளையும் கருடசேவைக்கு அழைத்து விட்டு நேற்று காலை நாராயணபெருமாள் கோவிலுக்கு வந்தார். மதியம் நாங்கூர் ஸ்ரீ நாராயணபெருமாள், ஸ்ரீ குடமாடு கூத்தர், ஸ்ரீ செம்பொன்னரங்கர், ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாள், ஸ்ரீ புருஷோத்தமன், ஸ்ரீ வைகுந்த நாதர், திருக்காவாளம்பாடி ஸ்ரீ கோபாலன், திருமணி கூடம் ஸ்ரீ வரதராஜ பெருமாள்,கீழச்சாலை ஸ்ரீமாதவபெருமாள், திருபார்த்தன் பள்ளி ஸ்ரீ பார்த்தசாரதி, அண்ணன் கோவில் ஸ்ரீ அண்ணன் பெருமாள் ஆகிய 11பெருமாள்கள், தாயாருடன் நாங்கூர் ஸ்ரீ நாராயண பெருமாள் கோவிலுக்கு வந்தனர். அவர்களை திருமங்கையாழ்வார் வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து கோவில் மண்டபத்தில் 11 பெருமாள்களும் எழுந்தருள அவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 1 மணிக்கு பெருமாள்கள் தங்க கருடவாகனத்தில் கோவில் முன்பு எழுந்தருள திரும ங்கையாழ்வார் மங்களா சாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 1:30 மணிக்கு மகா தீபாராதனை செய்யப்பட் டது. இதில் தமிழ்நாடு மட்டுமன்றி பிறமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து 11 பெருமாள்களையும் ஒரே இடத்தில் வழிபட்டனர். தொடர்ந்து இரவு 2 மணிக்கு வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. கருட சேவை உற்சவத்தில் நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி,எஸ்.பி., அபினவ்குமார் ஆகியோர் கலந்து கொண்டார்.விழாவையொட்டி சீர்காழி டி.எஸ்.பி., வெங்கடேசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீ யனைப்பு மீட்பு படையினர் கண்கானிப்பு பணியில் ஈடுபட் டிருந்தனர். சீர்காழி, மயிலாடுதுறையிலிருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.