பதிவு செய்த நாள்
27
ஜன
2015
10:01
திருப்பதி: திருமலையில் நேற்று, ரத சப்தமியை முன்னிட்டு, ஏழுமலையானின் உற்சவ மூர்த்தியான மலையப்பசாமி, ஏழு வாகனங்களில் வலம் வந்தார். சூரிய பகவான் பிறந்த தினமான ரத சப்தமியை முன்னிட்டு, மலையப்பசாமி நேற்று அதிகாலை முதல் இரவு வரை, ஏழு வாகனங்களில் வலம் வந்தார்.
காலையில், சூரிய ஒளி மலையப்பசாமி மேல் படும் வரை, சூரிய பிரபை வாகனம். பின், சின்னசேஷ வாகனம், கல்பவிருட்ச வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், சர்வ பூபால வாகனம், சந்திர பிரபை வாகனம் என, இரவு, 8:00 மணி வரை, ஏழு வாகனங்களில் வலம் வந்தார். மேலும், ரத சப்தமியை முன்னிட்டு, திருமலையில் நடந்த ஒருநாள் பிரம்மோற்சவத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த உற்சவத்தை முன்னிட்டு, திருமலையில் அனைத்து ஆர்ஜித சேவைகள் மற்றும் தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்தது. தர்ம தரிசனத்தில் மட்டுமே, பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். கடந்த மூன்று நாட்களாக, திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அதனால், ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள், 26 மணி நேரம் காத்திருந்தனர். நேற்று முன்தினம், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையாக, 2.96 கோடி ரூபாய் வசூலானது.