பதிவு செய்த நாள்
26
பிப்
2015
11:02
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்றுமுன்தினம் இரவு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நடைபெறும். ஒரு மாதம் நடைபெறும் இத்திருவிழாவை அறிவிக்கும் வகையில், கடந்த 17ல் நோன்பு சாட்டுதல் நடைபெற்றது. இதையடுத்து திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற துவங்கின. இதையடுத்து, நேற்றுமுன்தினம் இரவு 11:00 மணிக்கு மேல் கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், மூன்று கிளைகள் உடைய மரம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை சரியாக வடிவமைத்து, மஞ்சள் பூசி கோவில் தலைவாயில் முன்பு நடப்பட்டது. இதில் கோவில் நிர்வாகிகள் மற்றும் முகக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
நேற்று காலை முதல் பொள்ளாச்சி பகுதி பெண்கள், தங்கள் வீடுகளில் இருந்து குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து, நடப்பட்டிருந்த கம்பத்துக்கு அபிேஷகம் செய்து சென்றனர். இதற்கு பிறகு, அடுத்த மாதம், 3ம் தேதி இரவு, 9:00 மணிக்கு பூவோடு வைக்கப்படும்.தொடர்ந்து, 6ம் தேதி முதல் வெளிப்பூவோடு ஆரம்பமாகும். அன்று இரவு, 11:00 மணிக்கு கிராம சாந்தி செய்யப்படும். தொடர்ந்து, 7ம் தேதி காலை, 10:30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். அடுத்து, 11ம் தேதி காலை, 6:00 மணி முதல் பெண்களால் அம்மனுக்கு மாவிளக்கு கொண்டு வரப்படும். தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அன்று இரவு, 7:00 மணிக்கு அம்மன் வெள்ளித்தேரில் திருவீதியுலா வருவார். மார்ச், 12ல், 7:00 மணிக்கு இரண்டாம் நாள் தேரோட்டம், 13ம் தேதி இரவு, 7:00 மணி முதல் மூன்றாம் நாள் தேரோட்டத்தில், தேர்நிலைக்கு வந்து சேரும். அன்று இரவு பரி வேட்டை, தெப்பத்தேர் நிகழ்ச்சிகள் நடைபெறும்.அடுத்து, 14ம் தேதி காலை, 8:30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடல், இரவு, 9:00 மணிக்கு கம்பம் எடுத்தல் நடைபெறும். அடுத்த மாதம், 16ம் தேதி இரவு, 8:00 மணிக்கு மகா அபிேஷகத்துடன் திருவிழா சாட்டு முடிவடையும்.