பதிவு செய்த நாள்
04
மார்
2015
12:03
பெங்களூரு: கற்பூரத்திலிருந்து வெளியாகும் புகை, அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்களின் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கிறது என்பதால், கார்வார் மாவட்டத்தின் பெரும்பாலான கோவில்களில், கற்பர ஆரத்தி காட்டுவதற்கு, கோவில் நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர்.
கோவில்களில், பல ஆண்டுகளாக பூஜை செய்துவரும் அர்ச்சகர்களுக்கு, ஆஸ்துமா, அலர்ஜி, நுரையீரல் தொந்தரவு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.
நல்ல வரவேற்பு: இந்நோய்களுக்கு, கற்பூர ஆரத்தியே காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கார்வார் மாவட்டத்தில் உள்ள பல முக்கிய கோவில்களில், கற்பூர தீபாராதனையை தடை செய்யப்பட்டு உள்ளது. இதற்கு மக்களிடமிருந்தும், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கற்பூரத்தினால் தோன் றும் புகை, தொடர்ந்து நுரையீரலுக்கு சென்றால் ஆஸ்துமா, அலர்ஜி உட்பட பல நோய்கள் ஏற்படும். மேலும், கற்பூர புகையினால், மூலஸ்தானம் முழுவதும் கறுமை நிறத்தில் சாம்பல் படிகிறது. இதை சுத்தப்படுத்துவது, கோவில் நிர்வாகத்தினருக்கு பெரும் தலைவலியாகவே உள்ளது. இதனால், கற்பூர ஆரத்தி காட்டுவதற்கு, கோவில் நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர். ராமசந்திரபுரா மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, கோகர்ணா மகாபலேஸ்வரா கோவிலின் மூலஸ்தானத்தில், சில மாதங்களுக்கு முன், கற்பூர ஆரத்திக்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டது.
முக்கிய கோவில்கள்: இடகுஞ்சி மகாகணபதி கோவில், ஹொன்னாவர் தாலுகா முக்வா சுப்ரமண்யா கோவிலிலும், கற்பூர ஆரத்திக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது போன்று கர்நாடகாவின் முக்கிய கோவில்களில், கற்பூர ஆரத்தி தடை செய்யப்பட்டு வருகிறது. இது மேலும் அதிகரிக்கும் என, எதிர்பாக்கப்படுகிறது.