பதிவு செய்த நாள்
04
மார்
2015
12:03
ஊட்டி : பொக்காபுரம் மாரியம்மன் கோவில் விழா, உற்சாகமாக நடந்தது.
ஊட்டி மசினகுடி அருகே, அடர்ந்த வனப்பகுதியில், அமைந்துள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில், ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டைய விழா, கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, அம்மனுக்கு தினமும் காலை முதல் மாலை வரை, சிறப்பு அபிஷேகம், பூஜைகள், திருவிளக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஊட்டி, கூடலூர், மசினகுடி, மாவனல்லா உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து கரகம், முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக பொக்காபுரம் கோவிலை வந்தடைனர்.
விடிய, விடிய கொண்டாட்டம் : விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது; இரவு, 10:00 மணிக்கு, மாவட்ட கலெக்டர் சங்கர், தேரை வடம் பிடித்து இழுத்து, துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரபாண்டியன் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். விழாவை காண, மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும், பக்தர்கள், பொதுமக்கள் வந்தனர். இரவு முழுக்க பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டது. கோவில் வளாகத்தை சுற்றி, ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள், உணவுக் கூடங்கள், விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்ததால், மக்கள், குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. சாலையில், வாகனங்கள் அணி வகுத்து வந்தால், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டது.
அன்னதானம் அமர்க்களம் : மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் நடக்கும் தேர் திருவிழாவை முன்னிட்டு, ஊட்டி நீலாம்பிகை சேவா சங்கத்தின் சார்பில், பக்தர்களுக்கு, நான்கு நாட்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த பிப்., 28ம் தேதி முதல், 3ம் தேதி மதியம் வரை கரகம் ஏந்தி வரும் பக்தர்களுக்கும், விழாவை காண வரும் பக்தர்களுக்கும், காலை, 7:00 மணி முதல், 10:00 மணி வரையும், மாலை, 5:00 மணி முதல், இரவு, 12:00 மணி வரையும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல, ஆணைகட்டி ஆனிக்கல் அம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில், திரளான பக்தர்கள் தீ மிதித்து, தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். இதில், படுகரின கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்று வழிபட்டனர்.