ஒரு சமயம் ஆஞ்சநேயர் வான் வழியாகப் பறந்து சென்று கொண்டிருந்தபோது, ஓரிடத்தில் மக்கள் திரளாக நின்று வழிபாடு செய்வதைக் கண்டார். அருகில் வந்து பார்த்த ஆஞ்சநேயருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. தன் இஷ்ட தெய்வமான ராமபிரானை மக்கள் வழிபடுகிறார்கள் என்பதை அறிந்து தானும் அவ்வழிபாட்டில் கலந்து கொண்டார். ராம பக்தியில் சிறந்த அவர் தன்னையும் மறந்து பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடினார். அப்போது ஒளிவடிவில் ராமபிரான் அவருக்குக் காட்சி கொடுத்தார். அவ்விடத்தில் கூத்தாடிய கோலத்தில் ஆஞ்சநேயருக்கு கோயில் ஒன்று எழுப்பப்பட்டது. ஆடுதுறை எனும் இத்தலம், திருவையாறில் இருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் அமைந்துள்ள சிறு கிராமம் ஆகும். (சூரியனார் கோயில் அருகில் உள்ள ஆடுதுறை அல்ல) இத்தலத்தில் உள்ள பெருமாளுக்கும் ஆடுதுறை பெருமாள் என்றே பெயர். இத்தலம் வடதிருக்கூடலூர் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டது.