மதுரை: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கைலாஷ், மானசரோவர் யாத்திரைக்கு ஜூன் முதல் செப்., வரை ஏற்பாடு செய்கிறது. யாத்திரை செல்ல விரும்புவோர் ஆன் லைனில் பதிவு செய்யலாம். இதுகுறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணிஸ்வரராஜா கூறியதாவது: யாத்திரை செல்ல விண்ணப்பத்தை ஏப்., 10க்குள் சமர்ப்பிக்க வேண்டும். யாத்திரை செல்ல பாஸ்போர்ட் பெற முன்பதிவு தேதி கிடைக்காதவர்கள் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் முன் அனுமதி பெற்று விண்ணப்பிக்கலாம். குறைகள் மற்றும் பாஸ்போர்ட் விபரங்கள் குறித்து பொது மக்கள் அலுவலக பேஸ்புக், டிவிட்டர், ஸ்கைப், இமெயில் மற்றும் நேரடி விசாரணை மையத்தின் மூலம் அறியலாம். மூன்று மாதங்களில் தவறான தகவல்கள் மற்றும் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டதை மறைத்து விண்ணப்பித்த 236 நபர்களின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் விதிகள்படி கப்பல் ஊழியர்கள், பாய்மரக் கப்பலில் பயணம் செய்வோர் பாஸ்போர்ட் இன்றி வெளிநாட்டிற்கு செல்லும் போது தங்கள் அடையாள அட்டையை மட்டும் காண்பித்தால் போதும் என்ற நிலையிருந்தது. இனி பார்ஸ்போர்ட் இருந்தால் மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்ல முடியும் என்ற சட்டம் வரும் ஜூன் 6ல் அமலுக்கு வருகிறது.