நான் வைத்தது தான் சட்டம், நான் சொல்வது மட்டும் தான் நடக்க வேண்டும், நான் நினைத்ததை அடைய என்ன வேண்டுமானாலும் செய்வேன் என திரிபவர்கள் பலர் இருக்கிறார்கள். நபிகள் நாயகம் இவர்களுக்காகவே, ஒரு அருமையான வசனத்தை இறைவனிடமிருந்து பெற்று அருளியிருக்கிறார். உலகம் வெளிஅழகைக் காட்டி ஓடிக்கொண்டிருக்கிறது. மறுமை (மரணத்துக்குப் பிறகுள்ள வாழ்க்கை) நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் மறுமையின் மனிதர்களாக மாறிவிடுங்கள். உலக மனிதர்களாக ஆகிவிடாதீர்கள். இங்கே செயல் மட்டுமே; கேள்வி இல்லை. அங்கே கேள்வி மட்டுமே; செயல் இல்லை, என்பதே அந்த வசனம். ஆம்... இங்கே நாம் என்ன வேண்டுமானாலும் பாவச்செயல்களை செய்து பலனடைந்து கொண்டிருக்கலாம். கேள்வி கேட்க ஆளில்லை என்ற தைரியம் இருக்கலாம். கேட்டாலும் அவர்களை ஒடுக்கி விடலாம். ஆனால், அங்கே யாரையும் அடக்க முடியாது. இங்கே செய்யும் செயல்களுக்கு இறைவனிடம் பதிலளிக்க வேண்டியிருக்கும். பதில் சொல்ல முடியாவிட்டால் நரக நெருப்பில் வீழ்வதை தவிர வேறு வழி கிடையாது.