பதிவு செய்த நாள்
27
ஏப்
2015
12:04
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோவில் தொடர்பாக, தமிழகம், கேரளா இடையே நடந்து வரும் வழக்கில், கோவில் அமைந்துள்ள இடத்தில் தொல்லியல் துறை இயக்குனர் ஆய்வு செய்தார். தமிழக, - கேரள எல்லை யில் மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது. கோவில் அமைந்துள்ள பகுதி யாருக்கு சொந்தம் என, தமிழக, கேரள மாநிலங்களுக்கு இடையே பிரச்னை உள்ளது. தமிழக வரலாற்றுடன் தொடர்புள்ள இக்கோவிலுக்கு, தமிழக பக்தர்கள், பளியன்குடி வழியாக சென்று வழிபட்டு வந்தனர். கடந்த, 1975ல், பளியன்குடி வழியாக கோவிலுக்கு ரோடு அமைக்கும் பணி துவங்கிய போது, ஆட்சி மாற்றத் தால் பணி தடைப்பட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்ட கேரள வனத்துறை, குமுளியில் இருந்து, 14 கி.மீ., துாரமுள்ள கண்ணகி கோவிலுக்கு, ஜீப் செல்லும் வகையில் பாதை அமைத்தது.
கேரள வனப்பகுதி வழியாக கோவிலுக்கு பாதை உள்ளதால், கோவில் கேரளாவுக்கு சொந்தம் என, கேரள தரப்பில் கூறப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கம்பம், கூடலுாரில் உள்ள மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை, கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, இந்திய தொல்லியல் துறை இயக்குனர் பிரேம்நாத், கேரள அட்டர்னி ஜெனரல் விஜய ராகவன் ஆகியோர் மங்கலதேவி கண்ணகிகோவிலில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கோவிலில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர். கோவில் அமைந்துள்ள பகுதி எந்த வனப்பகுதியில் உள்ளது என்பதையும் சர்வே செய்தனர். அதன் பின், பிரேம்நாத் கூறியதாவது: கண்ணகி கோவில், 1,800 ஆண்டுகளுக்கு முந்தையது. அக்காலகட்டத்தில் கோவில் அமைந்துள்ள விதம் குறித்து தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்தால் மட்டுமே அதேபோல் கோவிலை சீரமைக்க முடியும். இருந்தாலும், கோவில் தற்போதுள்ள நிலையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான திட்டம் வகுத்து எப்படி சீரமைக்க வேண்டும் என, விவாதித்து முடிவெடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.