ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இதற்கு நல்வாக்கு அருள்பவள் என்று பொருள். திருப்பாவையின் இரண்டாம் பாடலிலேயே செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் என்று அவள் பாடி விட்டாள். பொய் சொல்லாதே, திருடாதே என்று பிரித்துச் சொல்லாமல், எதெல்லாம் செய்யக்கூடாதோ அதைச் செய்யாதீர்கள் என நமக்கு உத்தரவு போட்டு விட்டாள். தீக்குறள் என்றால் பேசத் தகாத வார்த்தைகள். பேசத்தகாதவற்றை பேசாதீர்கள் என்றும் அவள் நமக்கு சொல்லியிருக்கிறாள். இதனால் தான் இவள் நல்வாக்கு அருளும் கோதை ஆனாள். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, ஆண்டாள், பட்டர்பிரான் புதல்வி, திருப்பாவை பாடிய செல்வி, வேயர் குல விளக்கு என்ற பெயர்களும் இவளுக்கு உண்டு.