அலுவலகத்திற்கு சென்றிருக்கும் மனைவி, இந்நேரம் வேலை தான் பார்த்துக் கொண்டிருப்பாளா! அல்லது தவறான செய்கையில் ஈடுபட்டிருப்பாளா என ஒரு கணவன் நினைத்து கொண்டிருப்பானேயானால், அவனுக்கு நிம்மதி இராது. இதே நினைப்பில் இருப்பதனால், அவள் வீட்டுக்கு வந்ததும், அவளுடன் சண்டை போடவே தோன்றும். உத்தமியான அந்தப் பெண்மணி மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்படுவாள். ஒரு சிலர் கோபத்தில் தாய் வீட்டுக்குச் சென்று விடுவர். சிலர் விபரீதமான முடிவுகளை எடுக்கக்கூடும்.ஒரு குடும்பத்தை எப்படி சந்தேகம் அழித்து விடுமோ, அதுபோல் தான் ஆண்டவரை வணங்குவதிலும், அவரை நம்புவதிலும் ஏற்படும் சந்தேகமும் வாழ்க்கையை அழித்து விடும். சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பானவன். அப்படிப்பட்ட மனுஷன், தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக, என்கிறது பைபிள்.எவனாகிலும் இந்த மலையை பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என்கிறார் இயேசுகிறிஸ்து. ஆம்... சந்தேகத்தைப் போக்குங்கள். அழிவைத் தடுத்து நிறுத்துங்கள்.