பதிவு செய்த நாள்
29
ஆக
2015
02:08
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஓணம் பண்டிகையையொட்டி, அத்தப்பூ கோலமிட்டு கேரள மக்கள் கொண்டாடினர். கேரளா மாநிலத்தில், ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகையையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், பொள்ளாச்சியில் வாழும் கேரளா மக்கள் பலரும் குடும்பத்துடன் கேரளாவிற்கு சென்றனர். ஒரு சில கேரளா மக்கள், அத்தப்பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்து பண்டிகையை கொண்டாடினர். மேலும், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். விழாவையொட்டி கோவில்களுக்கும் குடும்பத்துடன் சென்று வந்தனர். பொள்ளாச்சி டி.நல்லிக்கவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சமூக அறிவியல் மன்றம் சார்பில், அண்டை மாநிலத்தின் கலாசார பண்பாடு, நாகரிகம் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ளும் விதமாக கேரளா மாநிலத்தில் கொண்டாடப்படும் ஓணம் திருவிழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, மாணவியர் அத்தப்பூ கோலமிட்டு, மகாபலி மன்னனை வரவேற்றனர். ஓணம் கொண்டாடுவதன் நோக்கத்தை மாணவியர் தமிழரசி, மஞ்சு, சுபஸ்ரீ கூறினர். கேரள பாரம்பரிய நடனத்தில் ஒன்றான ’திருவாதிரை களி’ என்ற நடன நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் சந்திரா மற்றும் அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.