பதிவு செய்த நாள்
04
செப்
2015
11:09
சென்னை: காதிபவனில், பொம்மை கொலு கண்காட்சி துவங்கியது. அதில், புதுவரவான மரத்துாள், துணி, பைபர் பொம்மைகள் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன. கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரியை முன்னிட்டு, அண்ணாசாலையில் உள்ள காதி கிராமோத்யோக் பவனில், பொம்மை கொலு கண்காட்சி துவங்கி உள்ளது, அதில், பஞ்சமுக ஆஞ்சநேயர், ஆறுபடை வீட்டு முருகன், அஷ்ட லட்சுமிகள், தசாவதாரங்கள், 12 ஆழ்வார்கள், 18 சித்தர்கள், 27 வகையான ராமாயண செட்டுகள், 63 நாயன்மார்கள், வாராகி, பிரம்மாண்ட கும்பகர்ணன் என, பல்வேறு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. புதுவரவாக, கங்கை களிமண்ணில் தயாரிக்கப்பட்ட பொம்மைகள், மகாராஷ்டிர மாநில பைபர் பொம்மைகள், ஆந்திர மாநிலம், கொண்டப்பள்ளியில் தயாராகும் மரத்துாள் பொம்மைகள், துணி பொம்மைகள் ஆகியவை பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன. பொம்மை ரகங்கள், 35 ரூபாயில் இருந்து 80 ஆயிரம் ரூபாய் வரை, உள்ளன. அடுத்த மாதம் 22ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது. காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.