பதிவு செய்த நாள்
10
அக்
2015
11:10
புதுடில்லி: குஜராத் மாநிலத்தின், புகழ்பெற்ற சோம்நாத் கோவிலுக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, கோவிலின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் ஆனந்திபென் படேல் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு, புகழ்பெற்ற சோம்நாத் கோவில் இருக்கிறது. 12 ஜோதிர்லிங்க கோவில்களில், முதல் கோவிலான இங்கு, சிவபெருமான் லிங்க வடிவில் வீற்றிருக்கிறார். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், இந்த கோவிலுக்கு வருகின்றனர்.நேற்று காலை, கோவில் அறக்கட்டளைக்கு, கோவில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என, மிரட்டல் கடிதம் வந்தது. இதையடுத்து, கோவில் அமைந்துள்ள பகுதி முழுவதையும், போலீசார் சோதனையிட்டனர். கோவில், கடற்கரை பகுதியில் அமைந்துள்ளதால், கடலோர பாதுகாப்பு படை போலீசாரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பெயரில், குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட மிரட்டல் கடிதம், வதோதராவில், போஸ்ட் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.