பதிவு செய்த நாள்
17
நவ
2015
10:11
சபரிமலை:மண்டலகால பூஜைகளுக்காக சரண கோஷங்கள் முழங்க சபரிமலை நடை நேற்று மாலை 5:00- மணிக்கு திறக்கப்பட்டது. 41 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.
புதிய மேல்சாந்திகளும் பொறுப்பேற்றுக் கொண்டனர். சபரிமலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் மண்டலகால பூஜைக்காக நேற்று மாலை 5:00- மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஒரு ஆண்டாக சபரிமலையில் தங்கி பதவி நிறைவு பெறும் மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றினார். கணபதி கோயிலில் விளக்கேற்றி விட்டு, 18- படி வழியாக இறங்கி சென்று ஆழி குண்டத்தில் அக்னி வளர்த்தார். பின்னர் கோயிலுக்கு திரும்பும் போது 18- படிக்கு கீழே நின்ற புதிய மேல் சாந்திகள் சபரிமலை- சங்கரன் நம்பூதிரி, மாளிகைப்புறம் - உண்ணிகிருஷ்ணன் ஆகியோருக்கு மாலை அணிவித்து 18- படி வழியாக அழைத்து வந்தார். அவர்கள் கோயில் முன்புறம் வந்ததும், விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.இரவு 7 மணிக்கு சபரிமலை மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி, கோயில் முன்புறம் தரையில் அமர்த்தப்பட்டார். அவருக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பூஜைகள் நடத்தி ஒரு குடம் நீரால் அபிஷேகம் நடத்தினார். பின்னர் அவரது செவியில் ஐயப்பன் மூல மந்திரத்தை சொல்லிக்கொடுத்து கோயிலுக்குள் அழைத்து சென்றார். இதுபோல உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரிக்கு மாளிகைப்புறம் கோயில் முன்புறம் நடைபெற்ற சடங்கில்
தந்திரி அபிஷேகம் நடத்தி, தேவி மந்திரம் சொல்லிக்கொடுத்து கோயிலுக்குள் அழைத்து சென்றார். நேற்று வேறு விசேஷ பூஜைகள் நடைபெறவில்லை. இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும், தந்திரி அபிஷேகம் நடத்திய பின்னர் மண்டலகால நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். கணபதி ஹோமம் நடைபெறும். வரும் 41 நாட்களிலும் காலை 4.15 முதல் பகல் 12.30 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். எல்லா நாட்களிலும் காலை 7:30-க்கு உஷபூஜை, பகல் ஒரு மணிக்கு உச்சபூஜை, மாலை 6:30-க்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், இரவு 10 -க்கு அத்தாழபூஜை நடைபெறும்.
அலைமோதிய கூட்டம்: நடைதிறந்த நேரத்தில் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வசதிக்காக இந்த ஆண்டு பல சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக மரக்கூட்டத்தில் இருந்து சரங்குத்தி வரும் வழியில் கட்டப்பட்டுள்ள ஆறு கியூ காம்ப்ளக்ஸ்கள் பக்தர்கள் வசதியாக உள்ளன.பாதுகாப்பு: பாதுகாப்புக்காக திருவனந்தபுரம் கமிஷனர் விமல் தலைமையில் 1630 போலீசார் வந்துள்ளனர். பம்பையில் போலீஸ் தனி அதிகாரியாக ஜார்ஜ் பொறுப்பேற்றுள்ளார். இவர்களுடன் 135 மத்திய அதிவிரைவு படை வீரர்களும், 52 தேசிய பேரிடர் நிவாரண படையினரும் வந்துள்ளனர்.