ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்துார் அருகே சம்மந்தவயல் விவசாய நிலத்தில் 11 ம் நுாற்றாண்டு புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலை 5 அடி உயரம். புத்தர் தியான கோலத்தில் உள்ளார். கீழ் பகுதி மண்ணில் புதைந்து உள்ளது. மார்பில் சீரை என்ற மேலாடையும், இடுப்பு ஆடையும் சிற்பத்தில் வடிவமைத்துள்ளன. புத்தருக்கு நீண்ட காதுகள் உள்ளன. கையில் உள்ள தர்மச் சக்கரம், தலையின் சுருள்முடி சிதைந்து காணப்படுகின்றன. சுருள்முடிக்கு மேல் ‘உஷ்ணீஷம்’ என்ற தீச்சுடர் உள்ளது. புன்னகை புரியும் இதழ்களுடன் மிக அழகாக சிற்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதனை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் அரியான்குண்டு, சுந்தரபாண்டியன் பட்டினத்தில் ஏற்கனவே புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த 2 சிலைகளும் கடற்பகுதியில் கிடைத்தவை. தற்போது விவசாய நிலப்பகுதியில் சிலை கிடைத்துள்ளன. பல ஆண்டுகள் சிலை திறந்தவெளியில் இருந்ததால் தேய்மானம் அடைந்து உள்ளது. மேலும் சம்மந்தவயல் அருகில் ஆனந்துார், காமினி, சுத்தமல்லி போன்ற கிராமங்களின் பெயர்கள் புத்தமதம் தொடர்புடையதாக உள்ளன. புத்தரின் முதன்மை சீடரான ஆனந்தரின் பெயரால் ஆனந்துார் உருவாக்கப்பட்டிருக்கும். அதேபோல் சுத்தமல்லி என்பது சித்த மவுலி என்பதன் திரிபு. இதற்கு புத்தரின் உருவத்தை தலையில் தாங்கியவர் என்பது பொருள். காமினி என்பது இலங்கை சிங்கள சொல். இதன்மூலம் 11, 12 வது நுாற்றாண்டில் தமிழகம், இலங்கை இடையே அரசியல், வணிகம் தொடர்பு இருந்துள்ளது. இதன்மூலம் புத்தமதம் பரவி இருக்கும். கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலையை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.