பதிவு செய்த நாள்
02
டிச
2015
12:12
தேனி: தேனி மாவட்டத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர் களின் பாதுகாப்பிற்கு 5 கி.மீ., தூரத்திற்கு ஒன்று வீதம் மாவட்டம் முழுவதும் 26 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் 24 மணி நேரமும் பக்தர்களின் தூக்கம் கலைத்து காபி, குடிநீர், உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்ப சீசன் துவங்கி உள்ள நிலையில் தேனி மாவட்டம் வழியாக மட்டும் இந்த ஆண்டு 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலை செல்வார்கள் என போலீசார் மதிப்பீடு செய்துள்ளனர். வடமாநிலங்களில் இருந்து சபரிமலை செல்பவர்களும் தேனி மாவட்டத்தை கடந்தே செல்வர். இதனால் வெளணுட மாநில, மாவட்ட பதிவெண்கள்கொண்ட கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் தேனி மாவட்டத்தை அதிகளவில் கடந்து செல்கின்றன. இந்த வாகனங்களால் சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பல ஆயிரம் பக்தர்களை விபத்தின்றி பாதுகாக்க, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக , தேவதானப்பட்டியில் இருந்து குமுளி வரையிலும், ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரையிலும், போடியில் இருந்து தேனி வரையிலும் 5 கி.மீ., தூரத்திற்கு ஒன்று வீதம் மொத்தம் 26 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்துள்ளனர். இந்த சோதனை சாவடிகளில் பணியில் உள்ள போலீசார் பக்தர்களின் வாகனங்களை நிறுத்தி, டிரைவரிடம் பேச்சு கொடுத்து, அவருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுப்புகின்றனர். சோதனை சாவடிகளை கடந்து நடந்து செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள், தலையில் இருமுடியில் அணியும் வண்ண ஒளிரும் பட்டைகள் வழங்கி வருகின்றனர். தவிர, தேவதானப்பட்டி, பெரியகுளம், வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், குமுளி ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் தங்குமிடம், உணவு, குடிநீர், காபி வழங்கப்படுகிறது. விபத்துக்களை தடுக்கும் வகையில் இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி., மகேஷ் தெரிவித்தார்.