பதிவு செய்த நாள்
02
டிச
2015
12:12
பவானிசாகர்: பவானிசாகர் ஒன்றியம் பெரியகள்ளிப்பட்டி ஊராட்சியில், 600 ஆண்டுகள் பழமையான, பழனியாண்டவர் மலைக்கோவில் உள்ளது. இம்மலை, 300 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. மலையில் இருந்து பெரியகள்ளிப்பட்டி மற்றும் பவானிசாகர் அணையின் முழு அழகை தரிசிக்கலாம். மலைமுகட்டில் உள்ள குகையில், சுயம்புவாக லிங்க வடிவில் வள்ளி, தெய்வானையுடன் முருகர் காட்சி தருகிறார். அருகில் வில்வமரத்தின் கீழ் சிவன் அமர்ந்துள்ளார். இங்கிருந்து, 100 அடி தொலைவில் கோடையிலும் வற்றாத வள்ளி சுனை அமைந்துள்ளது. பழனியாண்டவரை தரிசனம் செய்து, வள்ளி சுனையில் தீர்த்தம் தெளித்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இங்கு மாதந்தோறும் சஷ்டி, கிருத்திகை, அமாவாசை தினத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் சூரசம்ஹாரம் விழாவும் கொண்டாடப்படுகிறது. மலையில் உள்ள கோவிலுக்குச் செல்ல ஆரம்பத்தில், 250க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் இருந்தன. காலப்போக்கில் அவை சிதிலம் அடைந்து செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர்களாக மாறி விட்டன. அந்தக் காலத்தில் பழனிக்கு செல்ல முடியாத பக்தர்கள், இங்கு காவடி எடுத்து வந்து தரிசனம் செய்துள்ளனர். மலைக்கோவில் என்றாலும் பக்தர்கள் வருகை கணிசமாக உள்ளது. ஆனால், வயதானவர்கள், குழந்தைகள் மலை மீது ஏற சிரமப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில், மலைக் கோவிலுக்கு பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பெரியகள்ளிப்பட்டி ஊராட்சி, வருவாய் துறை மற்றும் வனத்துறையினரிடம் அனுமதி பெற்று, 3 லட்சம் ரூபாய் செலவில் மண்பாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. கடந்த, 3 மாதமாக நடக்கும் இப்பணி, தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது.