பதிவு செய்த நாள்
02
டிச
2015
12:12
சபரிமலை :சபரிமலை வரும் பக்தர்களுக்கு உதவுவதற்காக அண்டை மாநிலங்களுக்கு தலா ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்படும் , ஐயப்பன் கோயில்களை இணைத்து, சுற்றுலா பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.சபரிமலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலைக்கு 16 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் தென் மாநிலங்கள் மட்டுமல்லாமல், வடமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். எனவே கேரள அரசு மற்றும் பிரதமர் மோடியின் ஒத்துழைப்புடன் சபரிமலையை தேசிய வழிபாடு மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதன் முன்னோடியாக தென் மாநிலங்களின் முதல்வர்கள் அல்லது முதல்வர் சார்பிலான அமைச்சர்களை கூட்டி வரும் ஜன., முதல் வாரத்தில் பம்பையில் பம்பா சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படும்.
அண்டை மாநில பக்தர்கள் வரும் போது அவர்களுக்கு உதவ, அந்தந்த மாநில அரசுகள் பயன்பாட்டுக்காக நிலக்கல்லில் ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்படும். ஐகோர்ட் வழிகாட்டுதல் படி இந்த நிலம் வழங்கப்படும். ஆனால் நிலத்தின் உரிமை எப்போதும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு வசம் இருக்கும். இதற்காக வரும் நான்காம் தேதி திருவனந்தபுரத்தில் உயர்அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இவ்வாறு நிலம் கொடுக்கும் போது கேரள மாநில பக்தர்கள் அதிகமாக செல்லும் திருப்பதி, பழநி, மூகாம்பிகை போன்ற இடங்களில் தேவசம்போர்டுக்கு இடம் கேட்கப்படும். ஆனால் அது ஒரு நிபந்தனையாக இருக்காது. குளத்துப்புழா, அச்சன்கோயில், ஆரியங்காவு, எருமேலி, பந்தளம், சபரிமலை கோயில்களை இணைத்து ,கேரள அரசு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனினும் இதில் தனியார்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தமிழகத்தில் மழையால் பக்தர்கள் வருகை குறைந்து தேவசம்போர்டு வருமானம் குறைந்துள்ளது. எனினும் வரும் நாட்களில் இது சரியாகும் என்ற நம்பிக்கை உள்ளது என, கூறினார்.