சபரிமலையில் கடும் கூட்டம் 13 மணி நேரம் காத்திருப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2015 10:12
சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. 13 மணி நேரம் காத்திருந்த பிறகுதான் 18-ம் படியேறி தரிசனம் பார்க்க முடிகிறது. சபரிமலையில் மண்டல காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது.
டிச., 27-ல் மண்டல பூஜை நடக்கிறது. அன்று இரவு நடை அடைக்கப்பட்ட பின் டிச.,30 மாலை 5.30 மணிக்கு மகரவிளக்கு கால பூஜைக்காக மீண்டும் திறக்கும். இதற்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.மழையால் சபரிமலை பயணத்தை தள்ளிபோட்ட தமிழக பக்தர்கள், தற்போது அதிகமாக வந்து கொண்டிருக்கின்றனர். பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்கி விட்டதால் குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் அதிகம். இதனால் சபரிபீடத்தில் இருந்து வரிசை தொடங்குகிறது. சபரிபீடத்தில் அதிகாலை 4 மணிக்கு வரும் பக்தர்கள், மாலை 4 மணிக்குதான் தரிசனம் பார்க்க முடிகிறது. வரிசையில் நிற்கும் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
ஆன் லைன் பதிவு திட்டமும் முறைப்படுத்தப் படவில்லை. நேற்று காலை பொறுமை இழந்த பக்தர்கள் போலீசின் தடுப்புகளை உடைத்து சன்னிதானம் நோக்கி முன்னேற முயன்ற போது நெரிசல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த 15-க்கும் மேற்பட்டவர்கள், சன்னிதானம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கால் முறிவு, மாரடைப்பு ஏற்பட்ட மூன்று பேர் கோட்டயம் மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பப்பட்டனர்.கடந்த 21-ம் தேதி தொடங்கிய கட்டுக்கடங்கா கூட்டம், நேற்று இரவிலும் தொடர்ந்தது. பம்பையில் குளித்து தயாராகும் பக்தர்கள், ௨மணி நேரம் வரை கம்பி வேலிக்குள் நின்ற பின்தான் மலையேறி செல்ல முடிகிறது.நிலக்கல்லில் தனியார் வாகனங்கள் தடுக்கப்படுகின்றன. இங்கு பக்தர்களை இறக்கி விட்டு, கேரள அரசு பஸ்சில் செல்ல வலியுறுத்துகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் மறியலில் ஈடுபட்டனர். வரும் நாட்களிலும் நிலைமை இதே போல்தான் இருக்கும்.