பதிவு செய்த நாள்
22
டிச
2015
11:12
உடுமலை அருகே கண்ணாடிப்புத்துாரில், பழங்கால சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம், உடுமலையை அடுத்துள்ள சிற்றுார்களில் தொல்லியல் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கண்ணாடிப்புத்துாரில், அமைந்திருக்கும் நந்தீசுவரர் கோவிலின் நிர்வாகப்பொறுப்பில் இருக்கும், சங்கிலித்துரை தந்த தகவலின் அடிப்படையில், அங்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, அங்கு ஐயனார் சிற்பம், புலிக்குத்திக்கல் என அழைக்கப்படும் நடுகல், துர்க்கைச்சிற்பம் ஆகிய சிற்பங்களை கண்டறிந்தார். இது குறித்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் கூறியதாவது: மக்களின் பராமரிப்பு இன்றி, பழமையான சிற்பத்தின் மதிப்பு அறியப்படாமல் முள்மரங்களும், புதர்ச்செடிகளும் நிறைந்த ஓரிடத்தில் அந்த ஐயனார் சிற்பம் இருந்தது. ஒரு பலகைக்கல்லில் படைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்ட ஐயனார் சிற்பம் அமர்ந்த நிலையில் உள்ளது.
வலது காலை கிடைநிலையில் வைத்தும், இடது காலை உயர்த்தி மடக்கியும் அமைந்துள்ளது. தலைப்பகுதி ஜடா மண்டலத்துடன் காணப்படுகிறது. வலது கையில், செண்டு வைத்திருக்கிறார். இடது கையை மடக்கிய நிலையிலிருக்கும் இடது காலின் மீது பதிய வைத்திருக்கிறார். கைகளில் தோள் வளையும், முன்னகை வளையும் உள்ளன. மார்பின் குறுக்காக இடது தோளிலிருந்து கீழாகச் சரிந்து இடையின் வலப்பகுதியில் வளைந்து பின்னோக்கிப்போகும் உபவீதம் என்னும் முப்புரி நுால் தடித்துக் காணப்படுகிறது. உயர்த்தி மடக்கிய இடது காலையும், வயிற்றுப்பகுதியையும் சேர்த்து பிணைக்கும் நிலையில் யோகப்பட்டை உள்ளது. இடையில் இடைக்கச்சு காணப்படுகிறது. தொடை மற்றும் கால் பகுதியில் ஆடை இருப்பது தெளிவாக புலப்படவில்லை. வலது காலில் கணுக்கால் பகுதியில் கழல் அணிந்திருப்பது போல தோன்றுகிறது.
ஐயனாரைப்பற்றி சில குறிப்புகள்: தமிழகத்தில், ஐயனார் ஒரு பழங்குடித்தெய்வமாக வணங்கப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக வேட்டுவர்கள் வணங்கும் தெய்வம். எனவே, காட்டுப்பகுதியில், ஐயனார் சிற்பங்களை காணலாம். வேட்டுவர் குழு தலைவன் ஆதி நாள்களில் வணங்கி வந்துள்ளனர். பழங்குடி மக்கள் ஐயனாரை வணங்கியது போலவே, சமண, பவுத்த சமயங்களை சேர்ந்தோரும் ஐயனாரை வணங்கியுள்ளனர். பவுத்தர்கள், தர்ம சாஸ்தா என்னும் பெயரிலும், சமணர்கள் பிரம்ம சாஸ்தா என்ற பெயரிலும் ஐயனாரை வணங்கி வந்துள்ளனர். வணிகர்கள் சமணத்தை ஆதரித்தனர். சமணத்தை தழுவிய வணிகர்கள், ஐயனாரைச் சாத்தன் எனும் பெயரால் வணங்கியுள்ளனர். வணிகர்கள் பலருடைய பெயர்களின் சாத்தன் என்ற பெயர் அமைந்துள்ளதை காண்கிறோம். சங்கப்பாடல்களில், சாத்தன் என்னும் பெயர் பயின்று வருகிறது.
கோவிலில் கல்வெட்டு: இங்குள்ள நந்தீசுவரர் கோவில் வளாகத்தில், அத்திகோசத்தார் எனும் வணிகர் படைக்குழுவினர் வணிக கல்வெட்டு இருப்பது, இப்பகுதியில் வணிகர்கள் பயணம் செய்ததையும் வணிக சந்தை இருந்ததையும் உறுதி செய்கிறது. எனவே, இந்த வணிகர்கள் ஐயனார் சிற்பத்தை இங்கே நிறுவி வணங்கி வந்துள்ளனர் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. முல்லை நில காட்டுப்பகுதி இருந்திருக்கலாம் என இச்சிற்பம் இங்குள்ளதை கொண்டு அறிய முடிகிறது. இதை உறுதிப்படுத்துவது போல், இதே பகுதியில் ஒரு புலிக்குத்திக் கல் கிடைத்துள்ளது.
புலிக்குத்திக்கல்: வீரன் ஒருவன் புலியை குத்தி கொல்லும் தோற்றத்தில் அச்சிற்பம் அமைந்துள்ளது. முல்லை கால்நடைகளை காவல் காக்க வீரர்கள் இருந்தனர். காவல் பணியில் இருக்கும் போது, கால்நடைகளை தாக்க வரும் புலியுடன் சண்டையிட்டு கொன்ற வீரர்களும் இறப்பதுண்டு. அந்த வீரர்களை போற்றும் வகையில், அவர்களது நினைவாக நடுகல் எழுப்பி வணங்குவது வழக்கம். இதே ஊரில் துர்க்கையம்மன் கோவில் அருகில் ஒரு பெண் தெய்வச்சிற்பம் காணப்படுகிறது. மிகவும் தேய்ந்து மழுங்கிய நிலையில் உள்ளது. நான்கு கைகள் கொண்ட சிற்பம் என்றாலும் தற்போது வலது பக்கம் இரு கைகளும், இடது பக்கம் ஒரே ஒரு கையின் தோள்பகுதி மட்டுமே காணப்படுகின்றன.
வலப்பக்கத்தின் ஒரு கையில் விரல் பகுதி முற்றிலும் உடைந்துள்ளது. மற்றொரு கையில் ஏந்தியுள்ள பொருள் எதுவென அடையாளம் காண இயலவில்லை. தலைப்பகுதியில் கிரீடம் காணப்படுகிறது. சிற்பம் துர்க்கையாக இருக்கலாம். அருகில் துர்க்கையம்மன் கோவில் உள்ளதால், பழங்காலத்தில் வணங்கப்பட்ட துர்க்கையம்மன் சிலையாக இச்சிற்பம் இருக்கக்கூடும். கண்ணாடிப்புத்துார் மக்கள், ஊரில் உள்ள நந்தீசுவரர் கோவில் கல்வெட்டுகளை போல இச்சிற்பங்களை பாதுகாப்பாக வைத்திருந்தால், வருங்கால சந்ததிகளுக்கு வரலாற்று பின்னணியை அறிந்து கொள்வர். இவ்வாறு சுந்தரம் கூறினார்.