அய்யாவாடி மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை நிகும்பலா யாகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2016 05:02
மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் மகா பிரத்தியங்கிரா தேவி அம்மன் கோயில் அமைந்துள்ளது. எட்டு திசையும் மயானத்தால் சூழப்பட்ட இந்த தலத்தில் ராவணன் மகன் மேகநாதனும், பஞ்ச பாண்டவர்களும் அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றனர். இத்தகைய பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது. இந்த யாகத்தில் கலந்து கொண்டு அம்பாளை சரணடைந்தால் 16 வகையான செல்வங்களையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
36 ஆண்டுகளுக்கு பிறகு வந்துள்ள மகோதய மற்றும் தைமாத அமாவாசையை முன்னிட்டு, காலை அம்பாளை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மதியம் 1 மணிக்கு தண்டபானி சிவாச்சாரியார் யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டி நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். மூன்று மணி நேரம் நடைபெற்ற நிகும்பலா யாகத்தில் திருச்சி மாநகர ஆணையர் சஞ்சை மாத்துார், தஞ்சை மாவட்ட எஸ்.பி. மயில்வாகணன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை சரணடைந்து தரிசணம் செய்தனர். யாகத்திற்கான எற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார். போலீஸ் அதிகாரிகள் வருகையை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கும்பகோணத்தில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.