27 ஆண்டுகளுக்கு பின்.. ஆதிஜெகநாத பெருமாள் தீர்த்தாரி கண்டருளல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2016 11:02
கீழக்கரை: மகோதய புண்ணிய காலத்தை யொட்டி சேதுக்கரை கடலில் திருப் புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் தீர்த்தாவாரி கண்டருளினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனிதநீராடினர். தை மாதம் அமாவாசை நாளில் அதிகாலையில் வியதிபாத யோகம், திருவோண நட்சத்திரம், திங்கள் கிழமை கூடிவருவது மகோதய புண்ணிய காலமாகும். கடந்த 1989ல் மகோதய புண்ணிய காலம் நடந்தது. 27 ஆண்டுகளுக்கு பின் இந்த அபூர்வ நிகழ்வு நேற்று நடந்தது. இத்துடன் திருப்புல்லாணி ஆதிஜெக நாத பெருமாள் தீர்த்தாவாரி நிகழ்ச்சியும் நடந்தது. இதற்காக பக்தர்கள் புடைசூழ பெருமாள் கருட வாகனத்தில் சேதுக் கரைக்கு எழுந்தருளினார். தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க திருபாதத்தின் மூலம் பெருமாள் தீர்த்தாவாரி கண்டருளினார். தொடர்ந்து ஸ்ரீரங்கம் ராமானுஜ மகாதேசிகர் உள்பட பக்தர்கள் அனைவரும் புனித நீராடினர்.
மகோதயத்தில் பித்ரு தோஷம் நீங்குவதற்காக சங்கல்ப பூஜைகள் செய்து முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக நேற்று அதிகாலை முதலே பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சேதுக்கரையில் குவிந்தனர். பெருமாள் தீர்த்தாவாரி கண்டருளியதும் பக்தர்கள் தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்துசேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் நெய்விளக்கேற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சமஸ்தான தேவஸ்தானம் செய்திருந்தது.
எஸ்.பி.பட்டினம்: தை அமாவாசையையொட்டி எஸ்.பி.பட்டினம் அருகே தீர்த்தாண்ட தானம் கடலில் நேற்று ஏராளமான பக்தர்கள் நீராடினர். பின்பு அங்குள்ள சகலதீர்த்தமுடையவர் கோயிலில் வழிபாடுகள் செய்து வழிபட்டனர். சீதையை மீட்க செல்வதற்கு முன் ராமர் இக் கோயிலில் வழிப்பட்டதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கிறது. சகலதீர்த்தமுடையவர், பெரியநாயகி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
தேவிபட்டினம்: தை அமாவாசையையொட்டி தேவி பட்டினம் நவபாஷாணத்தில் ஏராள மான பக்தர்கள் நீராடி முன்னோர் களுக்கு தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து நவகிரகங்களை சுற்றிவந்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் சிரமமின்றி புனித நீராட இந்து அறநிலையத் துறையினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.