பதிவு செய்த நாள்
20
பிப்
2016
12:02
உடுமலை: திருமூர்த்தி மலையில் வீற்றிருக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவில், கும்பாபிேஷகம் வரும், 26ம் தேதி நடக்கிறது. இதற்கான விழா, பிப்.,20 மாலை, 6:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. அணமலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ள பகுதியின் பல்வேறு சிறப்புகள் உள்ளன.
தோணியின் சிறப்பு: இத்திருத்தலத்தில் இருந்து மேற்கே, 1 கி.மீ., துாரத்தில் அழகிய மலைத்தொடரில் விண்ணை முட்டும் மரங்களடர்ந்த சோலைகளையும், சின்னஞ்சிறு குன்றுகளையும் கொண்ட குருமலையில் இருந்து சிற்றோடையாய் பிறக்கின்றாள் தோணி நதி. இத்தோணி நதியோடு, தென்னாறு, பாலாறு என்ற இரு நதிகளும் இம்மலைகளின் ஓரிடத்தில் வந்து கூடுகின்றன. இக்கூடுதுறையில் புண்ணிய தினத்தில் வந்து குளித்தால், பஞ்சபாதகங்களும், துன்பங்களும் கரைந்து போகும்.
இந்நதியில் புதுவெள்ளம் வரும் காலத்தில் பொன், ஆடை, ஆபரணங்கள், மலர்கள் இவைகளை கொண்டு பூஜித்தவர் பாவங்கள் யாவும் அழியப்பெறுவர். மேலும், இப்பிறவியின் கல்வி, செல்வம், மக்கட்பேறு மற்றும் அதனால் வரும் சுகத்தையும், மறுபிறவியிலும், இப்புண்ணிய உலகில் அமைந்துள்ள போகங்களையும், மனக்கலக்கமின்றி அனுபவித்து பின் அளவில்லாத பேரின்பத்தையும் அடைவர். தன் கரங்களுடன் துள்ளிக் குதித்து வந்து குன்றிலே குடியிருக்கும் திருமூர்த்திகளை வலம் வந்து அவர்தம் திருத்தாள்களையும் பணிந்து விட்டு, கருணை கொண்ட கன்னிமார்களையும் நலன் விசாரித்து, பின் நாணத்துடன் அணைக்கட்டுக்குள் ஐக்கியம் ஆகின்றாள் தோணி நதி. அவளது பஞ்சலிங்க அருவியில் நீராடி உளமாற மும்மூர்த்திகளை வழிபட்டால், உடலில் பிணி அகன்று உள்ளொளியும் பிறந்து விடும்.
பஞ்சலிங்கேஸ்வரரின் சிறப்பு: ‘தென்கயிலாயம்’ என்றழைக்கக்கூடிய இடத்தில், இயற்கை எழில் கொஞ்சும் வளங்களை கொண்ட இடத்தில் எழுந்தருளியுள்ளார், பஞ்சலிங்கேஸ்வரர். சூரியன் செல்லும் வானளவும் வளர்ந்தோங்கி விளங்குகின்ற பலவகை மரங்களின் செறிவையுடையதும் கனி வகை, மலர் வகைகளைக் கொடுக்கின்ற மரஞ்செடிகொடியென்னும் இறைகளால், கார், குளிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் எனும் ஆறு பருவத்திலும் மற்றும் தேன், கிழங்கு ஆகியவைகளை தந்து காக்கும் இச்சோலையின் நடுவில், தோணி நதியின் கரையில், பஞ்ச பூதங்களும் ஒன்றாக இணைந்து பஞ்சலிங்கேஸ்வரராக காட்சியளிக்கிறார். இந்த பஞ்சலிங்கேஸ்வரரை வந்து வழிபட்டால், பஞ்ச பூத தலங்களையும் வழிபட்ட சிறப்பு கிடைக்கும்.