பதிவு செய்த நாள்
30
ஏப்
2016
12:04
பழநி: பழநி கோயிலில் சமீப காலமாக உண்டியல் எண்ணிக்கை திருவிழா போல் நடப்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்காது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் மாதந்தோறும் இத்திருவிழா இணை ஆணையர் தலைமையில் நுாறுக்கும் மேற்பட்ட உண்டியல்கள் திறக்கப்பட்டு நாணயங்கள், ரூபாய்நோட்டுகள், ஆபரணங்கள் என பிரித்து எண்ணுகின்றனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோயிலில் ஏதோ திருவிழா போல நடக்கிறது. பக்தர்கள் இந்த செயலை ஆச்சரியத்துடன் பார்ப்பதால், உண்டியல் திருவிழா எனலாம். இதில் நாதஸ்வர, தவில் பள்ளி மாணவர்கள், வங்கி ஊழியர்கள், கோயிலை சார்ந்த கல்லுாரி மாணவிகள், ஸ்ரீசேவா சங்கம், கோயில் ஊழியர்கள், பொற்கொல்லர் என சேவை மனப்பான்மையுடன் இப்பணியில் பங்கேற்கின்றனர்.
எடை போடும் நாணயங்கள்: பழைய 5 ரூபாய் நாணயங்கள் 8.978 கிலோ(1000 காசுகள்), புதிய 2 ரூபாய் நாணயங்கள் 11.452 கிலோ (2000 காசுகள்), புதிய ஒரு ரூபாய் நாணயங்கள் 9.814 கிலோ (2000 காசுகள்) என எடைபோட்டு எண்ணப்படுகிறது. ரூபாய் நோட்டுக்களை ஆயிரம், ஐநுாறு, நுாறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் தனித்தனியாக பிரித்து எண்ணி, கட்டுகளாக வைக்கின்றனர். தங்கம், வெள்ளியால் ஆன வேல்கள், திருமாங்கல்யம், நாணயங்கள், வீடு, ஊஞ்சல், ஆள்ரூபம், செயின், உள்ளிட்ட வை பொற்கொல்லர் பரிசோதித்த பின் கணக்கிடப் படுகிறது.
அறுசுவை விருந்து: எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு உண்டியல் அப்பளம், வடை, பாயாசத்துடன் கூடிய அறுசுவை விருந்து வழங்கப்படும். மாதந்தோறும் ரூ.ஒருகோடியை தாண்டி தமிழகத்தில் அதிக வருமானமுள்ள கோயிலாக பழநி முதலிடத்தில் உள்ளது. பார்க்க ஆவலைத் துாண்டும் இத்தனை சிறப்பசம்பங்கள் கொண்ட உண்டியல் எண்ணிக்கையும் ஒருதிருவிழா தானே!