பகவான் பெரியவரா, பக்தன் பெரியவனா என்றால் பக்தனே பெரியவன் என்கிறார் ராமபிரான். ராமலட்சுமணருக்கு போர்க்களத்தில் இக்கட்டான நிலை ஏற்பட்ட போது, சஞ்சீவிமலையை சுமந்து வந்து உயிரளித்தவர் அனுமான். அதற்கு முன்பும் ஒருமுறை, ராமனுக்கு அவர் உயிரளித்திரு க்கிறார். ராவணனின் தம்பி விபீஷணன், ராமனுடன் நட்பு கொள்ள வந்தான். இது ராவணனின் சதியாக இருக்கும், அவன் உங்களை வேவுபார்க்க அனுப்பப்படுவதாக சந்தேகிக்கிறோம் என சுக்ரீவன் உள்ளிட்ட வானரர்கள் கூறினர். ராமனோ, அவனைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நல்லவனோ, கெட்டவனோ தன்னைச் சரணடைய ஒருவன் வருகிறான் என்றால், அவனை ஏற்பதே இறைவனின் பணி. அந்த தர்மத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் ராமன் இருந்தார். இல்லாவிட்டால், தர்மம் செத்து விடும். தர்மம் செத்தால் ராமனுக்கும் உயிர் இருக்காது. இந்த நிலையில், அனுமன் ராமனின் கருத்தை ஆமோதித்துப் பேசினார். பின், எல்லாரும் ராமனின் கருத்தை ஏற்றனர். ஒருவேளை அனுமனும் மறுத்திருந்தால், ராமனுக்கு மூச்சே நின்றிருக்கும். அனுமனின் ஆதரவான பேச்சு ராமனுக்கு மூச்சைத் தந்தது. காரணம், அவர் வாயுவின் பிள்ளை. மூ ச்சுக்கு பிரதானம் காற்றுதானே!