பதிவு செய்த நாள்
09
ஜூலை
2016
12:07
சென்னை: வேளச்சேரி, ராமர் கோவில் சம்ரோக் ஷணத்தை முன்னிட்டு, 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த யோக நரசிம்மர் சிலை, பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைஅடுத்து, யாக சாலை பூஜைகள் நேற்று துவங்கின. வேளச்சேரி, பிரதான சாலையில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, யோக நரசிம்ம சுவாமி கோவில் எனும், ராமர் கோவில் அமைந்துள்ளது. 2008ல், பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் துவங்கின. பல கோடி ரூபாய் மதிப்பில், முழுவதும் கருங்கல்லினால் கர்ப்பக்கிரஹம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், பிரகலாதர் சன்னிதி ஆகியவை கட்டப்பட்டன. மேலும், கோதண்டராமர், சக்கரத்தாழ்வார் சன்னிதியும் புனரமைக்கப்பட்டன. இதையடுத்து, வரும் 11ம் தேதி மகா சம்ரோக் ஷணம் நடக்கவுள்ளது. அதை முன்னிட்டு, பாலாலயம் செய்யப்பட்ட, 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூலர் யோக நரசிம்மர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று காலை யாகசாலை வளர்க்கப்பட்டு, ஹோமங்கள் நடத்தப்பட்டன. வரும், 11ம் தேதி காலை, 9:00 மணிக்கு, மகா சம்ரோக் ஷனம் நடக்கிறது.