பதிவு செய்த நாள்
19
செப்
2011
10:09
விருதுநகர்: வத்திராயிருப்பு அருகே உள்ள சுந்தரமகாலிங்கம் மலைக் கோயில் இடங்கள் முறையான அனுமதியில்லாமல் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி தவிக்கின்றன. இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டி வருகிறது. மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே உள்ள சுந்தர மகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. இங்கு சுந்தர மகாலிங்கம், சுந்தர மூர்த்தி, சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் ஆடி அமாவாசையும், நவராத்திரி விழாவும், மாதம் தோறும் பவுர்ணமி, அமாவாசை தினங்களில் பக்தர்கள் கோயிலுக்கு செல்கின்றனர்.
மதுரை மாவட்டம் சாப்டூர் பகுதியில் உள்ள வாழைதோப்பு வழியாகவும், தேனி மாவட்டம் வருஷநாடு மாளிகைப்பாறை வழியாகவும், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வழியாகவும் சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வரலாம். வனத்துறைக்கு சொந்தமான பகுதிகள் வழியாக 7 கி.மீ., மலைகளில் ஏறிய பின்னரே இந்த கோயிலை அடையமுடியும். இங்கு அகத்தியர், கோரக்கர், சட்டமுனி, மச்சமுனி உட்பட 18 சித்தர்களும் வந்துள்ளனர். கோயில் பகுதியில் 63.76 ஏக்கர் நிலம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1976 முதல் இருந்து வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக சிலர், கோயில் நிர்வாகத்தின் முறையான அனுமதியில்லாமல் பல கட்டடங்கள் கட்டியுள்ளனர். சிலர் தங்களுக்கு அனுமதிக்கப்பட்டதற்கு மேல் பல இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெறும் போது, கட்டடம் கட்டி கோயில் நிர்வாகம் வசம் ஒப்படைப்பதாக கூறுவார்கள். ஆனால், கட்டடம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்கின்றனர். சிலர் இதை, தனியாருக்கு வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கின்றனர். ஆக்கிரமிப்பு செய்பவர்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் துணை போவதால், நடவடிக்கை எடுப்பதில்லை. சதுரகிரி மலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டினால், இந்த மலையில் உள்ள புனிதம் கெடும் வாய்ப்புள்ளது.இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் சுதர்சன் கூறுகையில், ""சதுரகிரிமலைப்பகுதியில் உள்ள கட்டடங்கள் முறைப்படுத்தும் வகையில் இன்று நடக்கும் கூட்டம் பற்றி தெரியாது. இது தவறான பாதைக்கு அழைத்துச்செல்வது போல் உள்ளது. இது குறித்து கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
மாதத்திற்கு 10 டன் விறகுஎங்கிருந்து வருகிறது: மலை ஏறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது சிறப்பு தான். கோயில் பகுதியில் உள்ள மரங்களை அழித்து அன்னதானம் என்ற பெயரில் விறகுக்காக அழிக்கப்பட்டு வருகின்றன. மாதத்தில் அமாவாசை,பவுர்ணமி தினம் மட்டுமே அன்னதானம் என்றாலும் 10 டன் விறகு செலவிடப்படுகிறது. அன்னதானம் செய்பவர்களே மரங்களில் காய்ந்து விழுந்த பகுதிகளை மட்டுமே சேகரித்து அன்னதான சமையலுக்கு பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். முழுமையாக விறகு எரிக்க தடை விதித்து சிலிண்டர் மூலம் மட்டுமே அன்ன தானம் வழங்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சதுரகிரி மலையில்புனிதம் காக்கப்படுமா:சதுரகிரி மலையில் கோயிலுக்கு சாமி கும்பிடுபவர்கள் வந்து செல்வதை காட்டிலும், "ஜாலிக்காக வந்து செல்பவர்கள் அதிகரித்துள்ளனர். இவர்கள் அனுமதியில்லாத கட்டடங்களில் தங்கி மது குடித்து விட்டு, தகராறு செய்து வருகின்றனர். சதுரகிரி மலையில் இன்றும் சித்தர்கள் வாழ்ந்து வருவதாக பக்தர்கள் நம்பிக்கையில் வருகை தருகின்றனர். மலைகோயிலின் புனிதத்தன்மை காக்க இந்து சமய அறநிலையத்துறை இனியாவது நடவடிக்கை எடுக்குமா?