பதிவு செய்த நாள்
24
செப்
2016
11:09
திருப்பூர்: வீடுகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள திடீர் விநாயகர் கோவிலை அகற்ற வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். திருப்பூர், மாநகராட்சி முதல் வார்டு, அனுப்பர்பாளையம் திலகர் நகர் பகுதியில் ஏராளமான வீடுகள், பாத்திர பட்டறை <உள்ளன. ஆக., 17ம் தேதி, அப்பகுதியை சேர்ந்த சிலர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், விநாயகர் சிலை வைக்க முயற்சித்தனர். இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் ஆட்சேபணை தெரிவித்தனர். ஆனால், இரண்டு நாள் கழித்து, அதே பகுதியில், சற்றுத்தள்ளி, இரவோடு இரவாக திடீர் கோவில் அமைத்து, விநாயகர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கு, அப்பகுதியில் வசிக்கும், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விநாயகர் சதுர்த்தி விழா முடிந்ததும், இப்பிரச்னைக்கு முடிவு எடுக்கப்படும், என போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், எந்த நடவடிக்கையும் இல்லை. அப்பகுதியினர் கூறுகையில், ‘பொது வழியில், கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வருவாய் துறை, மாநகராட்சி மற்றும் போலீசார் ஒரு மாதமாகியும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டு விட்டனர்,’ என்றனர்.