பதிவு செய்த நாள்
01
அக்
2016
12:10
உடுமலை: மகாளய அமாவாசையை ஒட்டி, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிறைந்தது.
கோவிலை ஒட்டிய பாலாறு கரையில், முன்னோர்களுக்கு திதி வழங்கி வழிபாடு நடத்தினர். அமாவாசை திதி, மிகவும் சிறப்பு மற்றும் மகத்துவம் நிறைந்த திதியாகும். எல்லா மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பானதாக இருந்தாலும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை ‘பெரிய அமாவாசை’, ‘மகாளய அமாவாசை’ என்றும் சிறப்பித்து கூறுவர். இந்நாளில், முன்னோர்கள், மூத்தோர்கள், இறந்த தாய் மற்றும் தந்தையரை நினைத்து வழிபாடு நடத்துவர்.
நேற்று மகாளய அமாவாசையை ஒட்டி, திருமூர்த்திமலை மணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. பாலாற்றங்கரையில், முன்னோர்களுக்கு திதி வழங்கினர். அமாவாசையையொட்டி, அமணலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, மும்மூர்த்திகளை வழிபட்டனர். இந்து அறநிலையத்துறை சார்பில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.