பதிவு செய்த நாள்
12
அக்
2016
09:10
சாதுர்ய குணத்தால் வெற்றி பெறும் ரிஷப ராசி அன்பர்களே!
சூரியன், குரு மாதம் முழுவதும் நற்பலனைக் கொடுப்பார். புதன் அக்.18ல் இருந்து நவ.4 வரையிலும், சுக்கிரன் நவ.8க்கு பிறகும் நற்பலனைக் கொடுப்பார்கள். எனவே கடந்த மாதத்தை விட பணப்புழக்கம் அதிகரிக்கும். செயலில் வெற்றி உண்டாகும். வாழ்வில் ஆடம்பர வசதி அதிகரிக்கும். முயற்சியில் இருந்த தடையனைத்தும் மறையும். சமூகத்தில் மரியாதை சீராக இருக்கும். நவ.4க்கு பிறகு வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டாகும். கணவன், மனைவி இடையே அன்பு நீடித்தாலும் நவ.4க்கு பிறகு கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். நவ.11,12ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். அக்.19, 20, நவ.15ல் பெண்கள் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களால் பண உதவியும் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். கேதுவால் சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு.
தொழில், வியாபாரத்தில் வருமானத்திற்கு குறைவிருக்காது. இதுவரை இருந்த பிற்போக்கான நிலை படிப்படியாக மாறும். புதிய வியாபார முயற்சி தற்போது வேண்டாம். போட்டியாளர்கள் குறுக்கிட்ட தடையனைத்தும் விலகும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் அக்.18க்கு பிறகு வீடு திரும்புவர். அக்.17,18,21,22, நவ. 13,14ல் சந்திரனால் தடைகள் உருவாகலாம். அக்.30,31 ல் அதிக லாபம் கிடைக்கும்.
அக்.25 க்கு பிறகு செவ்வாயால் பிரச்னை குறுக்கிடலாம்.
பணியாளர்கள் பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். வேலை விஷயமாக வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்புவர். முக்கிய கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றிக் கொள்ளவும். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புண்டு. நவ.4க்கு பிறகு படிப்படியாக வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். நவ.9,10 அனுகூலமான நாட்களாக அமையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பெண்கள் வகையில் தொல்லை குறுக்கிடலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். நவ.8க்கு பிறகு நிலைமை சீராகும். அதன் பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். உங்களுக்கு கிடைக்க வேண்டிய புகழ், பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர். தொண்டர் நலனுக்காக செலவழிக்க வேண்டி வரும். அரசியல்ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். அக்.27,28,29ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
விவசாயிகள் உழைப்புக்கேற்ப பலனைக் காணலாம். கால்நடைவளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கோதுமை, பழவகைகள் போன்றவற்றில் விளைச்சல் சிறப்பாக இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தாமதமாகும். வழக்கு, விவகாரத்தில் ஈடுபட வேண்டாம்.
பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதாக நிறைவேறும். சகோதரிகளால் மேன்மை உண்டாகும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். நவ.4க்கு பிறகு கணவரிடம் விட்டுக் கொடுத்து போகவும். நவ.1,2,3ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். அக்.23,24ல் பொன்,பொருள் சேரும்.பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரப் பெறலாம்.
நல்ல நாள்: உங்கள் ராசிக்கு அக்.19,20,23,24,30,31, நவ.1,2, 3,9,10,11,12,15 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செய்தல் ஆகியவற்றைச் செய்யலாம்.
கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8ம் இடமான தனுசு ராசியில் சந்திரன் நவ.4,5ல் இருப்பார். இந்த காலத்தில் வீண் விவாதங்களைத் தவிர்த்து இறைவழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம்.
அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: மஞ்சள், சிவப்பு
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சனீஸ்வரரை வழிபட்டு காக்கைக்கு அன்னமிடுங்கள். வீரபத்திரர் வழிபாடு நன்மையளிக்கும். ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம். நாகதேவதையை வணங்கி வாருங்கள். புதன்கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.