பதிவு செய்த நாள்
03
டிச
2016
12:12
திருப்புட்குழி: காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழியில் அமைந்துள்ள, மரகதவல்லி சமேத விஜய ராகப் பெருமாள் கோவிலில், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், வறுத்த சிறுபயறை ஈரச்சேலையில் கட்டி, முளைக்கும் அதிசயம் நடக்கிறது. ஒவ்வொரு அமாவாசை அன்றும், இதற்காக வெளி மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
நம்பிக்கை தான் வாழ்க்கை என்ற முறையில், கோவில்களுக்கு சென்று வழிபட்டால் குறைகள், கஷ்டம் தீரும் என, மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்த வகையில், திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவிலில், ஒவ்வொரு அமாவாசை அன்றும், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் இங்குள்ள தாயாரை வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என, காலம் காலமாக நம்பப்படுகிறது.
இந்த வழிபாட்டில் பங்கேற்கும் பெண்களில் சிலருக்கு வழங்கப்பட்ட வறுத்த பயறு, முளைக்காமல் இருக்கலாம். அதனால் அவர்கள் தவறு செய்தவர்கள் என்று அர்த்தம் கிடையாது. ஒரு சிலர் உடல் வெப்பநிலையை பொறுத்து முளைக்கும், சில நேரங்களில் முளைக்காமல் போகும். அதற்காக, குழந்தை கிடைக்காது என, தவறுதலாக கருதக் கூடாது என, அப்பகுதியினர் கூறுகின்றனர்.
கோவிலின் சிறப்பு: வைணவ தலங்களில், 108 திவ்ய தேசத்தில் இந்த கோவிலும் ஒன்றாக விளங்குகிறது. வைணவத்தை வளர்க்க பெரிதும் பாடுபட்ட மகான் ராமானுஜர், இந்த கோவிலில் அவரது குருவிடம் வேதம் கற்றுக் கொண்டார். சடாயு ராவணனுடன் போர் புரிந்து மோட்சமுற்ற தலமாகவும் கருதப்படுகிறது.
குழந்தை பாக்கியம் பெற பெண்கள் அமாவாசை வழிபாடு: குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், இந்த கோவிலில், ஒவ்வொரு அமாவாசை அன்று முதல் நாள் காலை, 7:00 மணிக்குள் கோவிலுக்கு வந்து, மரகதவல்லி தாயார் சன்னிதியில் வறுத்த பச்சை பயறை வைத்து பூஜை செய்து பெண்களுக்கு முந்தானையில் வழங்குவர். அதை கட்டி இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அன்று பால், பழம் மட்டும் சாப்பிட வேண்டும்; இரவு அங்கு தங்க வேண்டும். மறுநாள் காலையில் அங்குள்ள குளத்தில் குளித்து விட்டு ஈரச்சேலையுடன், தாயார் சன்னிதி முன், மா கோலம், தீபம் போட்டு, மடியில் கட்டியிருந்த பயறை அவிழ்த்து வைப்பர். அப்போது ஆச்சரியம் நிறைந்த காட்சியாக பயறு முளைத்திருக்கும். அதன் பின் அவர்கள் வீட்டுக்கு செல்வர்.
பக்தர்களுக்கு தங்கும் வசதி உண்டு: இந்த சிறப்பு வழிபாட்டுக்காக வரும் பெண் பக்தர்கள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் தங்க, தனியார் அறக்கட்டளை சார்பில் தங்கும் விடுதி உள்ளது. தனி அறையாக வேண்டும் என்றால், 300 ரூபாய், பெரிய ஹாலில் தங்க வேண்டும் என்றால், 30 ரூபாய் கட்டணம். சென்னை, பெங்களூரூ, வேலுார் தேசிய நெடுஞ்சாலை அருகில் இந்த கோவில் உள்ளதால் பேருந்து வசதி உள்ளது.
அரசு தங்கும் விடுதிதிட்டம் கிடப்பில்: இந்த கோவிலுக்கு இந்த சிறப்பு வழிபாடு மற்றும் பிரம்மோற்சவம் காலங்களில், வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் தங்க போதிய வசதி இல்லை. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், அந்த கோவில் நிலத்தில், அரசு சார்பில் தங்கும் விடுதி கட்ட திட்டமிடப்பட்டது. அதற்கு அப்பகுதி பொதுமக்கள் பங்களிப்பு நிதி வழங்காததால், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் அரசு செலவில் கட்டி கொடுக்க வேண்டும் என, பக்தர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.