பதிவு செய்த நாள்
06
டிச
2016
03:12
கோவை: கோவையிலுள்ள புகழ் பெற்ற வெள்ளிங்கிரி மலைக்கோவிலில், கார்த்திகை தீபத்திருநாளில், பிரமாண்ட கொப்பரையில், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. தென்கயிலாயம்’ என்று போற்றப்படும், வெள்ளிங்கிரி மலைக்கோவில், மிகப்புனிதமானது. கோவையின் மேற்கே, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 6,000 அடி உயரத்தை கொண்டுள்ளது. இங்கு கடந்த பத்தாண்டுகளாக, கார்த்திகை தீபம் கொப்பரையில் ஏற்றும் வைபவம் நடந்து வருகிறது. டிச., 10ம் தேதி, பேரூராதீனத்திலிருந்து, ஊர்வலமாக புறப்படும் பக்தர்கள், கால்நடையாக பல்வேறு கிராமங்களை கடந்து, அங்குள்ள பக்தர்களை, இணைத்துக்கொண்டு, பக்திப்பயணமாக இரண்டு நாட்கள் மலை ஏறுகின்றனர். டிச., 12ல் வெள்ளிங்கிரி மலையின், ஏழாவது மலையில் கிரிவலமாக வருகின்றனர். அதன் பின், மலை முகட்டில் உள்ள, மலைக்குகையில் காட்சி தரும் சிவபெருமானுக்கு அபிஷேகங்களையும், சிறப்பு பூஜைகளையும் செய்கின்றனர். அதன் பின், பேரூராதீனம் இளையபட்டம் மருதாசல அடிகள், உள்ளிட்ட சிவாச்சாரியார்கள், ஆதீனங்கள் இணைந்து, பிரமாண்ட கொப்பரையில், மாலை 4:00 மணிக்கு, கார்த்திகை தீபம் ஏற்றுகின்றனர். 110 கிலோ எடை கொண்ட திரி போடப்படுகிறது. 3,000 கிலோ எடை கொண்ட நெய் மலை மீது கொண்டுசெல்லப்படுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.