பதிவு செய்த நாள்
07
டிச
2016
05:12
ஒரு சபையின் போதகரும், அவரது மகனும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை ஆராதனை முடிந்ததும், கைப்பிரதிகளை எடுத்துக்கொண்டு வீடு வீடாகச் சென்று கொடுப்பார்கள். அந்தப் பிரதிகளைப் படிப்பவர்கள், தங்கள் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்களை சபையில் வந்து சாட்சியாக அறிவிப்பது வழக்கம். ஒருநாள் கடும் மழை. அந்தச்சிறுவன் ரெயின்கோட் அணிந்து கொண்டு, “அப்பா! புறப்படுங்கள், கைப்பிரதிகளை கொடுத்து வரலாம்,” என்றான். தந்தை அவனிடம், “மகனே, இப்போது கடும் மழையாக இருக்கிறது. குளிரும் தாங்குமளவில் இல்லை. என்னால் வர முடியாது. நீயும் மழையில் சென்றால், உடம்புக்கு ஆகாது. அடுத்த வாரம் பார்த்துக் கொள்ளலாமே,” என்றார். சிறுவன் விடவில்லை. “அப்பா! மழை பெய்கிறதே என்பதற்காக எதுதான் நடக்காமல் இருக்கிறது! நரகத்துக்கு போகிறவர்கள் போய்க்கொண்டு தானே இருக்கிறார்கள்,” என்றான். மக்களை நரக வழிக்கு செல்வதில் இருந்து மாற்றி, தேவனின் வழிக்கு ஈர்ப்பதற்கு தன் மகன் காட்டும் அக்கறையை எண்ணி பெருமிதப்பட்ட தந்தை, “இருந்தாலும் மகனே! இன்று என்னால் வரமுடியாது,” என்றார்.
“அப்படியானால் நான் தனியாக சென்று வர அனுமதியுங்கள்,” என்றான் சிறுவன். தந்தையும் அனுமதி கொடுத்து விட்டார். அந்த கொட்டும் மழையிலும் வீடு வீடாகச் சென்று கைப்பிரதிகளை வினியோகித்தான் அந்தச் சிறுவன். அதன் தலைப்பு ஜீவனுக்குள் குதித்தல் என்பதாகும். பல இடங்களில் வினியோகித்து விட்டு ஒரே ஒரு கைப்பிரதி மட்டும் மிஞ்ச யாரிடமாவது அதைக் கொடுத்து விட்டு வீட்டுக்கு திரும்ப சிறுவன் முடிவெடுத்த வேளையில், மழை மிகக்கடுமையாகி விட்டது. அவன் நின்ற தெருவுக்குள் யாருமே இல்லை. எல்லாருமே வீட்டுக்கதவை அடைத்து விட்டனர். இருட்டி விட்டதால் விளக்குகள் ஒளிர்ந்தன. அவன் நின்ற இடத்தின் எதிரேயிருந்த வீட்டில் விளக்கு எரிந்தது. அங்கு போய் காலிங்பெல்லை அழுத்தினான் சிறுவன். கதவு திறக்கவில்லை. மீண்டும் மீண்டும் சிலமுறை அழுத்தினான். யாரும் வரவில்லை. திரும்பி விடலாம் என நினைத்தவன், ஒருமுறை கதவைத் தட்டிப் பார்த்தான். அப்போதும் யாரும் திறக்கவில்லை. அவன் வீட்டு வாசலில் இருந்து கீழே இறங்கவும், கதவு திறந்தது. ஒரு வயதான பெண்மணி, “தம்பி! எதற்காக கதவைத் தட்டினாய்,” என்றார்.
கையில் இருந்த பிரதியை அவரிடம் கொடுத்து, “அம்மா! தங்களைத் தொந்தரவு செய்ததற்காக மன்னிக்க வேண்டும். இயேசுவின் அன்பைக் குறித்த ஜீவனுக்குள் குதித்தல் என்ற பிரசுரத்தை கொடுக்கவே உங்களை எழுப்பினேன்,” என்றான். அந்தப் பெண் நன்றி சொல்லி விட்டு உள்ளே போய் விட்டார். இந்த சம்பவத்திற்கு பின் ஒருநாள், அந்தச் சிறுவனின் தந்தை ஆலயத்தில் ஆராதனை நடத்தி முடித்தார். இறுதியில், “யாரேனும் தங்கள் வாழ்வில் நடந்த மாற்றம் குறித்து சாட்சி சொல்ல வந்துள்ளீர்களா?” என்றார். அப்போது ஒரு மூதாட்டி எழுந்தார். “போதகரே! கடந்த வாரம் நடந்த ஒரு அதிசயத்தைச் சொல்கிறேன். என் கணவர் இறந்து விட்டார். அதுமுதல் எனக்கு வாழ்வில் பிடிப்பே இல்லை. பல துன்பங்களை அனுபவித்தேன். தற்கொலை செய்ய முடிவெடுத்தேன். வீட்டு மாடியில் துõக்கு கயிறை என் கழுத்தில் மாட்டும் நேரம். காலிங்பெல் சத்தம் கேட்டது. நான் கீழே போவதா வேண்டாமா என யோசித்தேன். சத்தம் நின்று விட்டது. மீண்டும் கயிறை மாட்ட முயன்றேன். அப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. சரி... போகும் நேரத்தில் யாரென்று தான் பார்த்து விடுவோமே என்று இறங்கி வர தாமதமாகி விட்டது. கதவைத் திறக்கவும், ஒரு சிறுவன் பிரகாசமான முகத்துடன் கொட்டும் மழையில் நின்றான். ஒரு துண்டு பிரசுரத்தை தந்தான். அதை வாங்கிக் கொண்டு சென்று படித்தேன். இயேசு பட்ட பாடுகளில் நமக்கு ஒன்று கூட நிகழவில்லையே என்று அறிந்து கொண்டேன். தற்கொலை எண்ணத்தை கைவிட்டேன். மரணத்திற்குள் குதிக்க இருந்த என்னை ஜீவனுக்குள் குதிக்க வைத்தது அதன் தலைப்பு,”என்றார். போதகர் கண்ணீர் பெருக்கினார். மகனை கட்டியணைத்துக் கொண்டார். மழையோ, பனியோ, புயலோ... நம் கடமைகளைச் செய்ய மட்டும் நேரம் காலம் பார்க்கக் கூடாது. உயிர்கள் வாழ தேவகாரியங்கள் நிற்கக்கூடாது.