சபரிமலை: சபரிமலையில் புதிய கொடிமரம் அமைப்பதற்கான செம்பு தகடுகளுக்கு நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சபரிமலையில் தற்போதுள்ள கொடி மரம் பழுதாகியுள்ளது. கொடி மரபீடத்தில் தங்க முலாம் பூசப்பட்டதால் அதன் சக்தியை இழந்துள்ளதாக தேவபிரசன்னத்தில் கூறப்பட்டது. இதனால் புதிய கொடிமரம் அமைக்க தேவசம்போர்டு முடிவு செய்தது. இதற்காக ரானி காட்டில் இருந்து தேக்கு மரம் பம்பை கொண்டு வரப்பட்டு செதுக்கி எண்ணெயில் ஊற வைக்கப்பட்டுள்ளது.
புதிய கொடிமரத்தில் 14 அடுக்குகள் செம்பு தகடுகள் பொருத்தப்படும். அதன் மேல்10.5 கிலோ தங்கத்தில் தகடுகள் பதிக்கப்படும். பொருத்துவதற்கான செம்பு தகடுகள் நேற்று சபரிமலை கொண்டு வரப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு அந்த தகடுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினார். தொடர்ந்து தந்திரியும், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரியும் இணைந்து தகடுகளை சிற்பிகள் சுகுமாரன் ஆசாரி, வினோத் ஆகியோரிடம் வழங்கினர். இதில் தேவசம்போர்டு தலைவர் கே.பாலகிருஷ்ணன், உறுப்பினர் அஜய் கலந்து கொண்டனர். பின்னர் தகடுகள் ஆலப்புழா மாவட்டம் மாணாறுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பணிகள் நடைபெறும். 2017 மகரவிளக்கு சீசன் முடிந்ததும் தற்போதைய கொடிரம் அப்புறப்படுத்தப்பட்டு புதிய கொடிமரம் நிறுவும் பணிகள் தொடங்கும். 2017 ஜூன் 25-ம் தேதி புதிய கொடிமர கும்பாபிஷேகம் நடைபெறும். 28-ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும்.