சபரிமலையில் கட்டுக்கடங்கா கூட்டம்: 18ம் படியேற 9 மணி நேரம் காத்திருப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2016 05:12
சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. பம்பை முதல் சன்னிதானம் வரையிலான பாதையில் ஆங்காங்கே தடுத்து நிறுத்துவதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். சபரிமலையில் மண்டலகாலம் நிறைவுகட்டத்தை நெருங்கியுள்ளது. வரும் 26ம் தேதி மண்டலபூஜை நடைபெறுகிறது. இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
பொதுவாக பள்ளி அரையாண்டு தேர்வு முடிந்ததும் மூன்று நாட்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பள்ளி தேர்வு நடந்து கொண்டிருக்கையிலேயே கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள ஐந்து கிலோ மீட்டர் பாதையில் பக்தர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படுகின்றனர். முதலில் பம்பையிலும், அதன் பின்னர் சபரிபீடத்திலும், மரக்கூட்டத்திலும் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். தொடர்ந்து சரங்குத்தியில் இருந்து இரும்பு வேலிக்குள் பல மணி நேரம் கால்கடுக்க நிற்க வேண்டியுள்ளது. 9 மணி நேரம் வரை கியூவில் நின்றால் மட்டுமே படியேற முடிகிறது. இதனால் பொறுமை இழந்த பக்தர்கள் இரும்பு வேலிகளுக்குள் இருந்து வெளியே வந்து காட்டில் செங்குத்தான சரிவில் இறங்கி சன்னிதானம் வருகின்றனர். இதை தொடர்நது சன்னிதானத்தின் முன்புறம் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க மத்திய ரிசர்வ் அதிரடிப்படை போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
பம்பையில் நெரிசல் ஏற்படுவதை தடுக்க நிலக்கல்லில் தனியார் வாகனங்கள் தடுக்கப்படுகிறது. இங்கு பக்தர்களை இறக்கி விட்டு கேரள அரசு பஸ்சில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை வந்து விட்டால் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என்பதால் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.