பதிவு செய்த நாள்
21
ஜன
2017
04:01
‘ஒரு சொல் கொல்லும், ஒரு சொல் வெல்லும்’ இது நம்மூரின் முதுமொழி. ஆம்! வார்த்தை மிகவும் வலிமையானது. தீய குணம் கொண்ட மனிதர்களைக் கூட அன்பான வார்த்தைகளால் நம் பக்கம் திரும்ப வைப்பதோடு, அவரது மனதிற்குள் ஒரு தன்மையான இரக்க குணத்தையும் உண்டாக்கிட முடியும். நீங்கள் நட்பு வட்டத்தை பெரிதாக்கிக் கொள்ள விரும்பினால், முதலில் அன்பாக பேச கற்றுக்கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் எப்போதும் சிரித்த முகத்தோடு பேசுங்கள். இன்முகம் காட்டி பழகுங்கள். இவ்வாறு இருந்தாலே உங்களுக்கான நட்பு வட்டம் எளிதில் பெருகிவிடும். ‘‘செல்வத்தை ஏழை எளியோருக்கு ஈவது மட்டுமே தர்மம் அல்ல. பிற மனிதரிடம் புன்முறுவல் காட்டுவதும் தர்மமாகும்,’’ என்று நபிகளார் சொல்லியுள்ளார். சோர்வோ, துன்பமோ நபிகளாரிடம் இருந்ததில்லை. எப்போதும் புன்முறுவல் பூத்த முகத்தையே பார்க்க முடிந்திருக்கிறது. ‘முகம், அகத்தின் கண்ணாடி’ என்பார்கள்.
மனதில் வாட்டத்துடன் இருப்பவர்களுக்கு எளிதில் முகமும் சோர்ந்து போகும். ஆனால் மனதை எப்போதும் துன்பம் இல்லாமல், மகிழ்ச்சியாக வைத்திருப்பவர்களின் முகம் ஒரு போதும் களைப்படைவதில்லை. ஒருமுறை அபூஜஹீல் எனும் கொடியவன், நபிகளைப் பார்த்து, ‘‘உங்கள் முகம் அவலட்சணமாய் இருக்கிறது. அருவருப்பாய் இருக்கிறது,’’ என கடுஞ்சொற்களை வீசினான். அதற்கு நபிகளார் அமைதியாக, ‘ஆம்’ என்று சொல்லி, புன்முறுவல் பூத்த முகத்தைக் காட்டினார். அந்த நேரத்தில் அங்கே வந்த நபிகளாரின் தோழர் அபூபக்கர், நபிகளாரைப் பார்த்து, ‘‘தங்கள் முகம் மருவற்ற முழுமதியைப் போல பிரகாசிக்கிறது. அழகு ததும்புகிறது,’’ என்று சொன்னார். அபூபக்கரின் புகழ் மொழிக்கும் நபிகள் ‘ஆம்’ என்று சொல்லி புன்முறுவல் பூத்தார். அதாவது அபூஜஹீல் அவரை இகழ்ந்தபோதும், அபூபக்கர் புகழ்ந்தபோதும் அவரது முகத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. எப்போதும் போல, புன்முறுவல் பூத்தார்.
நபிகளாரின் தோழர்கள் நடந்ததை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு குழப்பம். தங்கள் குழப்பத்திற்கு நபிகளிடமே விடை கேட்டனர். அவர்கள் நபிகளிடம், ‘இரண்டு பேருக்குமே இனிய முகத்தைக் காட்டினீர்களே ஏன்?’ என்றனர். ‘நான் அனைவருக்குமே ஒரு கண்ணாடி போலானேன். அபூஜஹீல் தன் முகத்தை என்னில் பார்த்தான். அது அவலட்சணமாக இருந்தது. அபூபக்கர் தம் முகத்தை என்னில் பார்த்தார். எனவே அது பூரண சந்திரனை ஒத்திருந்தது. எனவே இரண்டிற்கும் ஆம் என புன்முறுவல் பூத்தேன்’ எனக் கூறினார். அவரது பதிலைக்கேட்ட தோழர்கள் உண்மையை புரிந்து கொண்டார்கள். எதிரிக்கும் இன்முகம் காட்டுகிற குணம், பண்புகளிலேயே மிகவும் மகத்தானதாகும். ‘ஒரு முஸ்லிம் மற்றவர்களைக் கடுஞ்சொல் சொல்ல மாட்டான்; சபிக்கமாட்டான்’ என அல்லாஹ் குர்ஆனில் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறான். மனிதப் பண்பு என்பதே இனிய முகம் காட்டி அன்பு கொட்டுகிற நிலைதான். அந்த பண்பு இதுவரையில் இல்லாவிட்டாலும் இனியாவது வளர்த்துக் கொள்ள வேண்டும்.