சிலருக்கு வீடு கட்ட முடியவில்லையே, பெரிய பங்களாவில் குடியிருக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே வீடு கட்டியிருப்பவர்கள் பாங்கில் வாங்கிய 15 லட்சம் கடனுக்கு வட்டியுடன் 25 லட்சம் கட்ட வேண்டியிருக்கிறதே என தங்கள் முன்னால் நீண்டு கிடக்கும் தவணை ஆண்டுகளை நினைத்து வேதனைப்படுகிறார்கள். இன்னும் சிலர், இருக்கிற வீட்டை இன்னும் விரிவு படுத்தலாமே என்றெண்ணி கடனை வாங்கி கஷ்டப்படுகிறார்கள். உங்களுக்கு ஆண்டவர் சொந்த வீட்டைக் கொடுக்காமல், வாடகை வீட்டைக் கொடுத்திருக்கிறார் என்றால், அந்த மாதம் கொடுத்த வாடகையுடன் தொல்லை முடிந்தது என சந்தோஷப்படுங்கள். ஏனெனில், இந்த உலகமே நாம் தங்க வந்த வாடகை வீடு தான்! சாமுவேல் பவுல் ஐயர் என்ற பிரபலமான போதகரை அருளப்பர் உபாத்தியார் என்ற ஊழியக்காரர் கவனித்துக் கொண்டார்.
மரணப்படுக்கையில் இருந்த ஐயர், அருளப்பரிடம், “சகோதரரே! என் இந்த வீட்டைப் பாருங்கள். இதன் கூரையையும் பாருங்கள்! எவ்வளவு கேவலமாய் இருக்கிறது! இதற்காக நான் வருத்தப்படவில்லை. ஏனெனில், நான் போகும் மாளிகைக்கு (பரலோகம்) இது ஈடாகாது. தைக்காட்டிலும் மிக அலங்காரமான மாளிகை எனக்கு தயாராக இருக்கிறது. அவ்வீட்டிற்கு நான் கிளம்புகிறேன். அது ஆண்டவரால் எனக்கு இலவசமாக தரப்பட இருக்கிற நிரந்தர வீடு. ஆலயமணி அடிக்கிறது. இதோ! ஆண்டவரைக் காண நான் புறப்படுகிறேன்,” என்றபடியே கண்ணை மூடினார். இது புரியாமல், பூமியில் பிறந்த நாம் நம்மைச் சார்ந்த குடும்பத்தினர் மீது கண்மூடித்தனமான அன்பை வைத்து, அதில் இருந்து மீளமுடியாமல் சிரமப்படுகிறோம். இதுபற்றி அப்போஸ்தலராகிய (இயேசுவின் சீடர்) யோவான் என்ன சொல்கிறார் தெரியுமா? “உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்,” என்று! வாழ்க்கைப் பயணத்தின் இலக்கு மோட்சம் தான்.
பைபிளில், “நீங்களும் நானும் மோட்சப் பிரயாணிகள். நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது. நம்முடைய கண்களை இந்த உலகத்தின் மேல் பதிக்காமல் நித்திய ராஜ்யத்தை நோக்கி நாம் விரைந்து செல்வோமாக!” என்ற வசனம் இருக்கிறது. இந்த வசனம் வாழ்வின் யதார்த்த நிலையை வெளிப்படுத்துகிறது. நாம் இங்கே போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதையும், நிஜ வாழ்வு என்பது என்ன என்பதையும் இயேசு கிறிஸ்துவின் அமுத மொழிகள் நமக்கு புரியவைத்திருக்கிறது. இனியேனும் இறைசிந்தனையுடன் வாழ்ந்து, இங்குள்ள வீட்டை மறந்து, நிரந்தர வீடான பரலோக வீட்டில் இன்ப வாழ்வு பெற ஜெபம் செய்வோம்.