பதிவு செய்த நாள்
24
பிப்
2017
11:02
திருப்பூர் ;திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், காரி நாயனார் குரு பூஜை விழா நடைபெற்றது.திருக்கடவூர் என்ற இடத்தில், காரி நாயனார் என்னும் செந்நாப்புலவர் அவதரித்தார். புலமைமிக்க இந்த சிவனடியார், தமிழை நன்கு ஆராய்ந்து அறிந்து கவிபாடும் திறனை பெற்றிருந்தார். கோவில்களுக்கு ஆண்டுதோறும் திருப்பணிகள் பல செய்தார்.ஒருமுறை காரி நாயனார், சொல் விளங்க பெருமான் மறைந்து நிற்கும் வண்ணம், தமது பெயரால் "காரிக்கோவை என்ற நூலை இயற்றினார்.
மூவேந்தர்களுடைய உயர்ந்த நட்பை பெற்றார். அவர்களுக்கு, நூலின் தெள்ளிய உரையை நயம்பட கூறினார்.அவரது தமிழ்ப்புலமையை எண்ணி வியப்படைந்த மூவேந்தர்களும், பொன், பொருட்களை பரிசளித்து சிறப்பித்தனர். பொற்குவியலோடு, திருக்கடவூர் திரும்பிய காரி நாயனார், சிவன் கோவில்களை புதுப்பித்தும், புதிதாக கட்டியும் கும்பாபிஷேகம் நடத்தினார். சிவனடியார்களுக்கு அன்போடு அமுதளித்து, பெரு நிதிகளை அள்ளிக் கொடுத்து, அகமகிழ்ந்தார். திருக்கடவூரில் கோவில் கொண்டுள்ள அமிர்தகடேஸ்வரரையும், அபிராம வல்லியையும், பாமாலையாலும், பூமாலையாலும் சேவித்தார்.அவரது குருபூஜை விழா, மாசி மாதம் பூராடம் நட்சத்திர நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் உள்ள, காரி நாயனாருக்கு, நேற்றுமுன்தினம் குரு பூஜை விழா நடைபெற்றது.இதையொட்டி, அர்த்தசாம பூஜை அடியார் திருக்கூட்டத்தின் சார்பில், சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.