பதிவு செய்த நாள்
20
மார்
2017
11:03
ஊத்துக்கோட்டை : சிவன் கோவில்களில், இந்தாண்டின் முதல் சனிப்பிரதோஷ விழா, வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாதமும், அமாவாசை, பவுர்ணமிக்கு இரு தினங்களுக்கு முன், திரயோதசி திதியில் சிவன் கோவில்களில் பிரதோஷ விழா கொண்டாடப்படும். இதில், சனிக்கிழமை வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. இந்தாண்டு மொத்தமுள்ள, 25 பிரதோஷ தினங்களில், 5 நாட்கள் சனிப்பிரதோஷ விழா நடைபெற உள்ளது. பிரதோஷ விழா இந்தாண்டின் முதல் சனிப்பிரதோஷ விழா, வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. சுருட்டப்பள்ளி கிராமத்தில் உருவ ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், பிரதோஷ விழா நடைபெறும். அன்றைய தினம், காலை, கணபதி, முருகர், மூலவர் வால்மிகீஸ்வரர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும், சிறப்பு பூஜைகள் நடைபெறும். மாலை, 4:00 மணிக்கு, வால்மிகீஸ்வரர், நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட, பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மகா தீபாராதனை காட்டப்பட்டு, பின், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், கோவிலை மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
கோவில்களில் ஏற்பாடு: இதேபோல், ஊத்துக்கோட்டை, ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், தாராட்சி லோகாம்பிகா சமேத பரதீஸ்வரர் கோவில், வடதில்லை பாபஹரேஸ்வரர் கோவில், காரணி கிராமத்தில் உள்ள காரணீஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை வட்டம், மாம்பாக்கம் மார்கண்டேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான சிவன் கோவில்களில், பிரதோஷ விழா நடைபெற உள்ளது.