பதிவு செய்த நாள்
25
மார்
2017
12:03
ஆண்டிபட்டி, சித்திரை விழா துவங்கும் முன் மாவூற்று வேலப்பர் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓங்கி உயர்ந்த மரங்கள், அடர்ந்த வனத்தை உள்ளடக்கிய மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். உயரமான மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் நீர் சுனை கோடையிலும் வற்றுவதில்லை. பக்தர்கள் சுனையில் நீராடுவதால் புத்துணர்வு பெறுவதுடன், தீராத நோய்கள், மனக்கவலைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. கோயிலில் வேலப்பருக்கு இன்றும் இப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களே பூஜை செய்கின்றனர். மலை அடிவாரத்திலிருந்து, கோயில் வரை நானுாறு அடி உயரத்தில் 157 படிகளை கொண்டதாக கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சித்திரை முதல் தேதியில் நடைபெறும் விழாவில் 50 ஆயிரத்துக்கும் அதிக பக்தர்கள் கூடுவர். காவடி எடுத்தும், பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரை வந்தும் வேலப்பரை வழிபட்டு செல்வர். அடுத்தடுத்து வரும் நான்கு வாரங்களிலும் விழா நடைபெறும். ஒவ்வொரு மாத கார்த்திகை, பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். காவல் தெய்வம் கருப்பசாமிக்கு ஆட்டுக்கிடா வெட்டி பலரும் அன்னதானம் வழங்குவர்.
பராமரிப்பில்லை: கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கி செல்லவும், அன்னதானம் வழங்குவதற்கும் உள்ள சமுதாயக்கூடம் பராமரிப்பில்லை. கோயில் வளாகத்தில் கழிப்பறை வசதிகள் இல்லை. பக்தர்கள் திறந்த வெளிக்கழிப்பிடத்தை பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பாதுகாப்பான குடிநீர் வசதி போதுமான அளவு இல்லை.
சுகாதார சீர்கேடு: கோயில் வளாகத்தில் குவியும்குப்பை, பிளாஸ்டிக், பாலிதீன் கழிவுகள் வனப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. தேங்கும் கழிவுகள் அப்புறப்படுத்தப்படுவதில்லை. மழை பெய்து வெள்ளநீர் வந்தால் மட்டுமே இப்பகுதி சுத்தமடையும் நிலை உள்ளது. குளிக்கும் இடங்களில் ஷாம்பு, குளியல் சோப்பு பயன்படுத்தி, அதன் கழிவுகளை ஆங்காங்கே வீசி விடுகின்றனர். குடிமகன்கள் விட்டுச்செல்லும் காலி மதுபாட்டில்கள், உடைந்த பாட்டில்கள் பல இடங்களிலும் சிதறிக்கிடக்கின்றன. ஆண்டிபட்டியில் இருந்து கோயில் வரை ரோடு வசதி, வாகன வசதி இருந்தும் பராமரிப்பில்லாத கோயில் வளாகம் பக்தர்கள், சுற்றுலா வரும் பயணிகளுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தி விடும். கோயில் மேம்பாடு, அடிப்படை வசதி மேம்படுத்தல் போன்றவற்றில் அறநிலையத்துறை கவனம் கொள்ளவில்லை. விழாக்காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் இடத்தில் போதுமான அளவு சமதளப்பரப்பு இல்லை. அறநிலையத்துறை, ஊராட்சி நிர்வாகம் கோயிலுக்கு வரும் பக்தர் குழுக்களுடன் கலந்து ஆலோசித்து, கோயில் வளாகத்தில் தேவைப்படும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்களை கொண்டு செல்லகட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.
போக்குவரத்து பிரச்னை: சித்திரை விழா நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வாகனங்களில் வந்து கூடுவர். ஆண்டிபட்டியில் இருந்து 20 கி.மீ., துாரத்தில் உள்ள கோயில் வரை செல்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு சிறப்பு பஸ் வசதி செய்யப்படுகிறது. ஒரு வழிப்பதையில் நுாற்றுக்கணக்கான வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து பிரச்னை வழக்கமாக போலீசாருக்கு பெரும் சவாலாகிறது. தெப்பம்பட்டியில் இருந்து கோயில் வரையில் பல இடங்களில் ஒழுங்கற்ற முறையில் நிறுத்தப்படும் வாகனங்களால் தொடர் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். விழா துவங்கும் முன்பே பாதுகாப்புகள் மற்றும் போக்குவரத்து முன்னேற்பாடுகள் குறித்து திட்டமிடவும், குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே வாகனங்களை அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.