கொல்லங்கோடு கோயிலில் 1434 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2017 05:03
நாகர்கோவில்: பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் 1434 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவு பெற்றது. தமிழக -கேரள எல்லையில் கொல்லங்கோட்டில் பிரசித்தி பெற்ற பத்திகாளி அம்மன் கோயில் உள்ளது. குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடி இன்றி வாழ வேண்டியும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை தூக்க மரம் ஏற்றுவதாக வேண்டுதல் நடத்துகின்றனர்.
குமரி மாவட்டத்திலும், கேரளாவிலும் இதுபோன்று பல கோயில்களில் தூக்க நேர்ச்சை நடத்தினாலும் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் நடைபெற்றும் தூக்க நேர்ச்சை சிறப்பு பெற்றதாகும். இங்கு தூக்க திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பதாம் நாள் விழாவான தூக்க நேர்ச்சை இன்று நடைபெற்றது. இதற்கான தூக்க காரர்கள் ( குழந்தைகளை கையில் தாங்கிய படி தூக்க மரத்தில் தொங்குபவர்கள்) தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தேர்வு செய்யப்பட்டு கோயிலில் தங்கி விரதம் இருந்தனர்.
தூக்க நேர்த்தி கடன் நிகழ்ச்சி காலை தொடங்கியது. 40 அடி உயர தூக்க வில்லில் நான்கு தூக்கக்காரர்கள் துணியால் கட்டப்பட்டு அவர்கள் கையில் குழந்தைகளை கொடுத்ததும், தூக்க வில் மேல்நோக்கி எழும்பும். இதை தொடர்ந்து தூக்க வண்டி கோயிலை வலம் வரும். பக்தர்கள் தேர் போல் இந்த வண்டியை இழுத்து வருவார்கள். மொத்தம் 1434 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெற்றது. பிறந்து 90 நாட்கள் முதல் ஒரு வயது வரையிலான குழந்தைகள் தூக்கத்துக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.