பதிவு செய்த நாள்
31
மார்
2017
11:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம், நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம், ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.பல ஆண்டுகளாக பக்தர்கள் வழிபட்டு வந்த உற்சவர் சிலை சிதிலமடைந்ததால், புதிய உற்சவர் சிலையை இந்து சமய அறநிலையத்துறை வழிபாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. புதிய உற்சவருடன் இந்தாண்டு பங்குனி உத்திர பிரம்மோற்சவம் நடைபெறவுள்ளது. நேற்று காலை, 5:45 மணிக்கு, சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க, இந்தாண்டிற்கான உற்சவம் துவங்கியது. ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தீபாராதனை முடிந்த பின், 8:00 மணிக்கு, பவழக்கால் சப்பர வாகனத்தில், ராஜவீதிகளை சுவாமி, வலம் வந்து மீண்டும் கோவிலை சென்று அடைந்தார். இரவு உற்சவமாக, சிம்ம வாகனத்தில் சுவாமியும், கிளி வாகனத்தில் அம்பிகையும் எழுந்தருளி, ராஜவீதிகளை வலம் வந்து,அருள்பாலித்தனர்.