பதிவு செய்த நாள்
19
ஏப்
2017
02:04
ஆர்.கே.பேட்டை: முறையாக பராமரிக்கப்பட்டு வரும் கோவில் குளத்தில், தற்போது துார்வாரும் பணிகளை பகுதிவாசிகள் மேற்கொண்டு உள்ளனர். வரும் தீமிதி திருவிழாவிற்கு முன், பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம், மகன்காளிகாபுரம் கிராமங்களில் அம்மன் கோவில் எதிரே உள்ள குளங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒன்றியத்தில் உள்ள குளங்களுக்கு, இவை முன்னுதாரணமாக விளங்குகின்றன. சீரான படிகள், பளபளக்கும் இரும்பு வேலி என, குளத்திற்கு அழகூட்டப்பட்டுள்ளது. மழை நீருடன், குழாய் நீரும் குளத்திற்கு நீராதாரமாக விளங்குகிறது. கோடை விடுமுறையில், சிறுவர்களுக்கு நீச்சல் அடிக்க ஏற்றதாக அமைந்துள்ளது. இதில், பாலாபுரம்குளத்தில், தற்போது தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. இந்த தருணத்தில், குளத்தை துார் வாரி சீரமைக்க பகுதிவாசிகள் முடிவு செய்துள்ளனர். அதன் படி, குளத்தில் உள்ள குறைந்தளவு தண்ணீரை மின்மோட்டார் கொண்டு வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. அடுத்த சில நாட்களில் குளத்தை துார்வாரி, தண்ணீர் நிரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் துவங்க உள்ள தீமிதி திருவிழாவிற்கு முன், பணிகளை நிறைவு செய்ய உள்ளனர்.