பதிவு செய்த நாள்
29
ஏப்
2017
12:04
அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே, பூசாரியூரில் பிரசித்திபெற்ற செம்முனீஸ்வரர் கோவிலில் சித்திரை மாத தேர்த்திருவிழா, கடந்த, 14ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. செம்முனீஸ்வர், பச்சாயிஅம்மன், வாமுனீஸ்வர் ஆகிய தெய்வங்களுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 9:00 மணியளவில், மடப்பள்ளியில் இருந்து, செம்முனீஸ்வரர், பச்சாயி அம்மன் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி அலங்கரிக்கப்பட்ட தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்து, மூன்று கி.மீ., தூரத்தில் உள்ள செம்முனீஸ்வரர் கோவிலுக்கு, மேள தாளங்கள் முழங்க சென்றனர். அங்கு தேர்களை வைத்து பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் அருகே உள்ள காவுத் திடலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. காணிக்கையாக கொண்டு வந்த ஆடுகளை, நீண்ட வரிசையில் நின்று, பக்தர்கள் பூசாரிகளிடம் கொடுத்தனர். பூசாரிகள் ஆடுகளை வெட்டி ரத்தம் குடித்தனர். குழந்தை வரம் வேண்டும் பெண்கள், தங்கள் மடியில் ரத்தத்தை பெற்றுக்கொண்டனர். நோய்வாய் பட்டவர்கள், பூசாரியிடம் வாங்கிய ரத்ததை உடலில் பூசிக்கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில், 3,000க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. ஈரோடு, சேலம், நாமக்கல் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், விழாவல் பங்கேற்றனர். தேரை மீண்டும், இன்று காலை, செம்முனீஸ்வரர் கோவிலில் இருந்து மடப்பள்ளிக்கு கொண்டு செல்வர்.