தென் தமிழகத்து அம்மன் தலங்களில் சிறப்புப்பெற்றது. குமரிமாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லங்கோடு, கேரள விதிப்படி பூஜைகள் நடைபெறும் இந்தத் தலத்தில், இரண்டு கோயில்களில் அருள்பாலிக்கிறாள் பத்ரகாளி அம்மன். கொல்லங்கோடு கண்ணனாகம் ஜங்ஷனிலிருந்து மேற்கில் சுமார் அரை கி.மீ. தூரத்திலுள்ள வட்டவிளையில் மூலக் கோயிலும், கண்ணனாகத்தில் இருந்து கிழக்கில், அரை கி.மீ. தூரத்திலுள்ள வெங்கஞ்சியில் திருவிழாக்கோயிலும் அமைந்துள்ளன.
இங்கே பங்குனி பரணியை முன்னிட்டு நடைபெறும் தூக்கத் திருவிழா வெகு பிரசித்தம். குழந்தை பாக்கியம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடியின்றி, அறிவும் நீண்ட ஆயுளும் பெற்ற வாழவும் அம்மனை வேண்டிக்கொண்டு பக்தர்கள் நிகழ்த்தும் தூக்க நேர்ச்சை வைபவம், சிலிர்க்கவைப்பதாகும் சுமார் 40 அடி உயரமுள்ள இரண்டு வில்கள் பூட்டப்பட்ட ரதத்தில், ஒவ்வொரு வில்லிலும் இரண்டு தூக்கக்காரர்கள் என நான்கு பேரும், அவர்கள் கையில் ஒவ்வொரு குழந்தையும் இருப்பார்கள். ஆக, ஒரு நேரத்தில் நான்கு குழந்தைகள் ரதத்தில் கோயிலை வலம் வந்து தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. இந்த வருடம் இக்கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள வெகு கோலாகலமாக நடந்தேறியது தூக்கத் திருவிழா!